states

பிப்.11 தூத்துக்குடியில் தமுஎகச கலை இலக்கிய விருதளிப்பு விழா

சென்னை, ஜன.01-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 11 அன்று தூத்துக்குடியில் கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020, 2021ஆம் ஆண்டுகளுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது” களுக்குத் தேர்வான நூல்கள், குறும்படம், ஆவணப்படம், ஆளுமைகளுக்கு  விருதளிப்பு விழா 2023  பிப்ரவரி 11ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது.   முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக் கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது பேராசிரியர் அ.மார்க்ஸ்க்கு ஒரு லட்சம் ரூபாய் விருதுத்தொகையுடன் வழங்கப்படுகிறது.  தோழர். கே. முத்தையா நினைவு விருது, தொன்மைசார்  நூல் வடசென்னை: வரலாறும் வாழ்வியலும் எழுதிய நிவேதிதா லூயிஸ்க்கு வழங்கப்படுகிறது. கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது, உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலை எழுதிய   அரிசங்கருக்கும்  சு.சமுத்திரம் நினைவு  விருது, விளிம்பு நிலை மக்கள் குறித்த  படைப்பான அணங்கு எழுதிய அருண்பாண்டியன் மனோகரனுக்கும் இரா. நாகசுந்தரம் நினைவு விருது, கலை  இலக்கிய விமர்சன நூல் அரசியல் சினி மாக்களும் சினிமாக்களின் அரசியலும் எழுதிய சுகுணா திவாகருக்கும் வழங்கப்படுகிறது. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது,

கவிதைத் தொகுப்பு: பியானோவின் நறும்புகை எழுதிய நிலாகண்ணனுக்கும் அகிலா  சேதுராமன் நினைவு விருது, சிறுகதைத்தொகுப்பு திமிரி எழுதிய ஐ.கிருத்திகாவுக்கும் வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, யாத்வஷேம் – நேமி சந்திரா படைப்பை   தமிழில் மொழி பெயர்த்த கே.நல்லத்தம்பிக்கும்   தமுஎகச  வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்  பழந்தமிழ் நூல்களில் வினைவழிப் பெயர்கள் எழுதிய முனைவர்.ச.சுபாஷ் சந்திர போஸ்க்கும்  இராஜபாளையம் மணி மேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது,  குழந்தைகள் இலக்கிய நூல் மந்திரக் கிலுகிலுப்பை எழுதிய சரிதா ஜோவுக்கும், பா.இராமச்சந்திரன் நினைவு விருது, குறும்படம் தித்திப்பு -  முரளி திருஞானத்திற்கும்  வழங்கப்படுகிறது.  என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம் லேண்ட் ஆஃப் பீஃப் – யு.எஸ்.மதன்குமாருக்கும் மு.சி. கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி  நினைவு விருது, நாட்டுப்புறக் கலைச்சுடர்  தோல்பாவைக்கூத்து பி.முத்துச்சந்திர னுக்கும் மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது, இசைச்சுடர் (அமரர்) வைகறை கோவிந்தனுக்கும் த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர் அ.மங்கை.  மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது பெண் படைப்பாளுமை பா.ஜீவசுந்தரிக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.