states

தினமலரின் சிண்டு முடியும் வேலை தமிழகத்தில் நடக்காது - மதுரை சொக்கன்

கர்நாடக தேர்தலில் பாஜக அடைந்துள்ள படுதோல்வி 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்ற பாஜகவின் கனவில் இடியென இறங்கியுள்ளது. அக்கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ ஏடாக விளங்கும் தினமலர் பதற்றமடைந்து தனது திரிப்பு வேலையை இருமடங்காக்கியுள்ளது.  விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்திடுவோம்; சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பட்டியலின பழங்குடி மக்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வெட்டி சிதைத்து திரித்து திருகி தனது சித்து வேலையை காட்ட முயன்றுள்ளது. இந்த தீர்மானம் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்துள்ள ‘செக்’ என்ற தலைப்பிட்டு இந்த மாநாடு ஏதோ திமுக ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்டது போல புனைந்து எழுதுகிறது. இந்த மாநாட்டில் திமுகவின் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்பட தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றதை கூட அந்த ஏடு மறைக்கிறது.

தமிழகத்தில் சாதியக் பாகுபாடுகள் இன்னமும் தொடர்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அது தொடர்பான சில விபரங்கள் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளன. தினமலர் வரிந்து கொண்டு ஆதரிக்கும் சனாதனத்தின் அடிப்படையிலான சாதியப் பாகுபாடுகளும், தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளும் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. பொதுவுடைமை இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து சாதியக் கொடுமையை எதிர்த்து கருத்தியல் ரீதியாகவும் களத்திலும் போராடி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் விழுப்புரம் மாநாடு ஆகும். திராவிட இயக்கமும் சாதியக் கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது என்பதை மறுக்க முடியாது. சாதியத்திற்கு எதிரான போராட்டம் என்பது அனைவரும் இணைந்து நடத்த வேண்டிய ஒன்று. அதற்கான விரிவான தளத்தைத்தான் விழுப்புரம் மாநாடும் அமைத்துள்ளது. சாதிய கொடுமைகளுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், பாலபிரஜாபதி அடிகளார் போன்ற ஆன்மீகவாதிகளும் ஒரே மேடையில் ஒன்றாக நின்று குரல் கொடுப்பது சனாதன ஆதரவு ஏடான தினமலருக்கு உவப்பாக இல்லை. உதறல் எடுக்கிறது. தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த மாநாட்டின் தீர்மானத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஒரே வரியில் முடித்துவிட்டது தினமலர்.

2021 ஆம் ஆண்டு பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 50,900. மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 8,802. இது அகில இந்திய நிலவரம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது ஒன்றிய பாஜக ஆட்சிதான். ஆனால் இது தமிழ்நாட்டில் மட்டும் நடந்தது போல தினமலர் எழுதியிருப்பது அடிப்படை ஊடக தர்மத்திற்கு எதிரானது. பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான தொலை திட்ட அமலாக்கம் உரிய அக்கறையுடன் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்படுவதில்லை. இதற்கான நிதியில் பல்லாயிரம் கோடியை ஒன்றிய அரசு தொடர்ந்து குறைத்து பட்டியலின பழங்குடி மக்களை வஞ்சிக்கிறது. இந்தியா முழுவதும் பட்டியலின பழங்குடி பெண்கள், குழந்தைகள் உரிய சத்தான உணவின்றி ரத்தச் சோகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்று தீர்மானம் விவரித்துள்ளது. பழங்குடி மக்களின் நிலத்தை பறிக்கும் வகையில் வன உரிமைச் சட்டத்தை ஒன்றிய அரசு தீர்த்துப் போகச் செய்துள்ளது குறித்து தீர்மானம் மோடி அரசு மீது குற்றம் சாட்டுகிறது.

வர்ணாசிரமக் கோட்பாடுகளை நிலைநிறுத்த மதவெறி பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உழைக்கும் மக்களை ஒன்று சேர விடாமல் சாதிய மோதல்களை உருவாக்குவதும், இம் மக்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை பெரும் கலவரங்களாக மாற்றும் பணியில் சாதிய சக்திகள் முனைந்து வருகின்றன. இந்த சக்திகளை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஊக்கப்படுத்தி வருகின்றன என்று தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை தினமலர் வசதியாக மறைத்துவிட்டது. ஒன்றிய அரசு பின்பற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளை பட்டியலிடும் தீர்மானம், இதை எதிர்த்துப் போராடும் மக்களை சாதி, மதத்தை காட்டி பிரித்தாள முயல்வது கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்றுவதற்கே என்று தீர்மானம் கூறுகிறது. கலைஞர் தலைமையிலான அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை தீர்மானம் பாராட்டியுள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசு தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதையும், கேரள அரசை தொடர்ந்து தமிழக அரசும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி பணி நியமன ஆணை வழங்கியுள்ளதையும் மாநாடு வரவேற்றுள்ளது.

ஆனால் தினமலர் இதையெல்லாம் மறைத்து விட்டு, திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல கூறுவது, அப்பட்டமான மோசடியாகும். ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே சாதியப் பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவு கட்டிவிட முடியும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். தமிழகத்தில் சமத்துவ சமூகம் அமைந்திட மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும். அதைத்தான் இந்த மாநாட்டின் தீர்மானம் செய்துள்ளது. ஆனால் கட்சியின் நிர்வாகி கூறியதாக ஏதேதோ சரடு விட்டுள்ள தினமலர், தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அணி வலுவாக, ஒற்றுமையாக இருப்பதை பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலுக்கு வடிவம் கொடுத்துள்ளது. கூட்டணி தர்மம் குறித்து தினமலர் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஊடக உலகில் உண்மையின் உரைகல் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் அந்த ஏடு, உண்மையை கல்லில் வைத்து உரசுவதை குறைத்துக் கொள்ளட்டும்.