states

img

“எங்கே எங்கள் எய்ம்ஸ்”?

மதுரை, ஜன. 23- மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி “எங்கே எங்கள் எய்ம்ஸ்” என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் ஜனவரி 24 (இன்று) மதுரை பழங்கா நத்தத்தில் காலை பத்து மணிக்கு நடை பெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மக்கள் நலன் சார்ந்த இந்தப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க மதுரை மக்களுக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர் முழக்கப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா ஆகியோருடன் இணைந்து திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., கூறியதாவது:- தொடர் முழக்கப் போராட்டத்தில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, திமுக மாவட்டச் செயலாளரும் மதுரை  வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான கோ.தளபதி, மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் மதுரை எய்ம்ஸ் மட்டும் இன்றளவும் அறிவிக்கப்பட்ட அதே நிலையில் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1264  கோடி மதிப்பில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2022-ஆம் ஆண்டு மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்டது. (ரூ.713 கோடி அதிகம்). மறு மதிப்பீட்டுத் தொகை  உயர்த்தப்பட்டதற்கு 150 படுக்கை கள் கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படு வதைக் காரணமாகக் கூறினர். அதாவது உயர்த்தப்பட்ட தொகையில் ஒரு படுக்கைக்கு ரூ.4.74 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்

எய்ம்ஸ் கட்டுமானப் பணியைத் தொடங்க ஒன்றிய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அசைய மறுக்கிறது ஒன்றிய அரசு. பிப்ரவரி - 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் முழுமையாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுமானப் பணி தொடங்கும் தேதியை அறிவிக்க வேண்டும். ஜெய்கா நிறுவனம் ரூ.1627 கோடி வழங்குவதில் பிரச்சனை இல்லை.  அவர்கள் வட்டிக்குக் கொடுக்கின்றனர். ஆனால், ஒன்றிய அரசு தாம் வழங்க வேண்டிய ரூ.350 கோடியை உடனடியாக இந்தப் பட்ஜெட்டில் அறிவித்துக் கட்டுமானப் பணி தொடங்கும் தேதியை அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் திட்டங்களைப் பாரபட்சத்துடன் பார்ப்பது, வஞ்சிப்பது என்ற அரசியலின் ஒரு பகுதியாகத்தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி யையும் ஒன்றிய பாஜக அரசு பார்க்கிறது. 30 மாதங்களாகச் சுற்றுச்சுவர் கட்டும் பணி தான் நடைபெறுகிறது.

சமாளிக்கும் இராஜாஜி மருத்துவமனை

மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் வருடத்திற்கு 15 லட்சம் பேர் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 7.46 லட்சம் பேர் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 40 சதவீதம் பேருக்கே இடவசதி உள்ளது. எஞ்சியுள்ள 60 சதவீதம் பேருக்கான இட வசதியை சமாளிப்பதில் பெரும் சிரமம் உள்ளது.

கண்துடைப்பு வேலை

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டி யுள்ளது. தொடர் அழுத்தம் காரணமாக ரூ.2.50 கோடிக்கு மருத்துவமனைக் கான நிர்வாகப்பிரிவு கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்துடைப்பு வேலை.

மருத்துவமனையையே பார்க்காமல் பட்டம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டுப் பட்டம் பெற்று வெளியேறும் போது கூட அவர்கள் ‘பயின்ற’ கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாது. தாங்கள் பயின்ற கல்லூரியையே பார்க்காமல் பட்டம் பெற்று வெளியேறுபவர்கள் மது ரை எய்ம்ஸ் மாணவர்கள் மட்டும் தான்.இவ்வாறு அவர் கூறினார். கடந்த அதிமுக ஆட்சி, பாஜகவுடன் அனுசரித்ததால் தான் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றது; திமுக அனு சரித்துப் போகாததால் தான் பணிகள் நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறதே என்ற செய்தியாளர் களின் கேள்விக்குப் பதிலளித்த சு.வெங்கடேசன், மாநில அரசுக்கும், எய்ம்ஸ் பணிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. நிலம் வழங்குவது மட்டும் தான். அதிமுக அரசு நிலத்தை வகைமாற்றம் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்து மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அதிமுக அரசு நிலத்தை வகை மாற்றம் செய்தது என்பது தான் உண்மை. பாஜக-வின் அலட்சியம், குறுகிய அரசியல் பார்வையாலேயே பணிகள் தாமதமாகிறது என்றார்.