states

சவுக்கு சங்கருக்கு 4 வழக்குகளில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

சென்னை, நவ. 17 - நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து செப்டம்பர் 15-ஆம்  தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனிடையே, நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், சிறைத்தண்டனையை ரத்து செய்ய வேண்டு மென வலியுறுத்தி சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே. மகேஸ்வரி அடங்கிய  அமர்வு நவம்பர் 11-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.  இதையடுத்து சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலை யில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர்  பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் நவம்பர் 11-ஆம் தேதி கைது செய்தது.  இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் வியாழனன்று ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.