states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தில்லி பேரணிக்குச் சென்ற தோழர் கே.வி.வேதகிரி மரணம்

சிஐடியு அஞ்சலி

சென்னை,ஏப்.4- தில்லி பேரணிக்குச் சென்ற தோழர் கே.வி.வேதகிரி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு   சிஐடியு அஞ்சலி செலுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு  மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: செங்கல்பட்டு மாவட்ட சிஐடியு  முன்னணி தலைவர்களில் ஒருவரும் முறைசாரா தொழிலாளர்களை திரட்டுவதில் பிரதான பாத்திரம் வகித்த தோழர் கே.வி.வேதகிரி மாரடைப்பால் மரணமடைந்தார். சிஐடியு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. புதுதில்லியில் ஏப்ரல் 5 அன்று நடைபெறும் பேரணிக்குச் சென்ற தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவரும், மூத்த தோழருமான தோழர் கே.வி. வேதகிரி (வயது 70) அவர்கள் திங்களன்று அமிர்தசரஸ் சென்று சுற்றிப்பார்த்து விட்டு திரும்பும் போது அவருக்கு கடுமையான நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்களன்று இரவு 11 மணிக்கு உயிரிழந்தார். இந்த துயரச் செய்தியை அவருடன் சென்ற செங்கல்பட்டு மாவட்ட தோழர்களும்  மாவட்ட பொறுப்பாளரும் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்தனர். பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது.  இந்த துயரமிக்கச் சம்பவத்தால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிக்கிமில்  திடீர் பனிச்சரிவு 7 பேர் உயிரிழப்பு;  43 பேரை காணவில்லை

கேங்டாக், ஏப். 4- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் பிரபல சுற்று லாத்தலமாக இருப்பது நாதுலா மலை முகடுகள். இந்த மலை பகு தியின் ஜெ.என். சாலை மிகவும் ஆபத்தானது ஆகும். இதனால்  சுற்றுலாப் பயணிகள்  ஜெ.என்.சாலையின் 13-வது மைலுக்கு அப்பால் செல்ல மாநில அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  செவ்வாயன்று சுற்றுலாப் பயணிகளில் பலர் ஆபத்தை உணராமல் தடையை மீறி 15-வது மைல் வரை சென்றுள்ளனர்.  அந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 80 பேர் சிக்கினர். 30 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ள நிலையில், குழந்தை உட்பட 7 சுற்றுலாப் பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 43 பேரை காணவில்லை.

ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி... 2-ஆவது உச்ச அளவைத் தொட்ட மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல்!

புதுதில்லி, ஏப். 4 - ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர், 2023 மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது, இரண்டாவது உச்ச அளவைத் தொட்டுள்ளது. இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி என்ற அடிப்படையில், கடந்த 2018 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி (Goods and Services Tax - GST) அறிமுகப் படுத்தப்பட்டது. எனினும், 2016 நவம்பரில் மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நலிவு காரணமாக, எதிர்பார்த்த அளவிற்கு ஜிஎஸ்டி வசூல் கிடைக்கவில்லை. அதன்பிறகு கொரோனா தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 2022 ஏப்ரலில், முன்னர் எப்போ தும் இல்லாத வகையில் 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலானது. இது ஒரு சாதனை அளவாக பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 11 மாதங்களிலும் இந்த அளவிற்கு ஜிஎஸ்டி வசூலாகவில்லை. இந்நிலையில்தான், 2023 மார்ச்சில், இரண்டாவது அதிக ஜிஎஸ்டி-யாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.  இதில் மத்திய ஜிஎஸ்டி-யாக 29 ஆயிரத்து 546 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி-யாக 37 ஆயிரத்து 314 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக 82 ஆயிரத்து 907 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 15 சதவிகிதம் அளவிற்கு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டு முழுவதுமே மாதந்தோறும் சராசரி யாக 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குறையாமல் ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து பாஜக-ஆர்எஸ்எஸ் குண்டர்கள் அராஜகம்

அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

அகர்தலா: திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 2 முதல் விவசாயிகள் சங்கம் மற்றும் இடதுசாரி களப்பணியாளர்கள் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  சமீபத்தில், கடந்த மார்ச் 27 அன்று இரவு கோவாய் மாவட்டத்தில் வன்முறைத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மாவட்டத் தின் கிலடலி பகுதியில் வசிக்கும் விவசாயி நிவேஷ் சர்காரின், பவர் டிரில்லர் விவசாய இயந்திரத்தை தீயிட்டு எரித்துள்ளனர். இதன் சில பாகங்கள் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அன்றிரவே, விவசாயிகளின் மீன் தொட்டிகளில் விஷத்தை கலந்ததால், மீன்கள் அனைத்தும் இறந்தன. இதனால், விவசாயிகளுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டர்கள் ஏழை விவசாயிகளின் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் திரிபுராவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவது மட்டுமின்றி, சங் பரிவார் குண்டர்கள் பொதுமக்களைத் தாக்கி அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். பாஜக-ஆர்எஸ்எஸ் இணைந்து மேற்கொண்ட இத்தாக்குதலில், விவசாயிகள் தங்கள் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள் ளனர். மேலும் இந்த குண்டர்கள், இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என விவசாயிகளை மிரட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில், திரிபுரா மாநில ஆளுங்கட்சி கொடூரமானத் தாக்குதல்களை அரங்கேற்றுவது கடும் கண்டனத்திற்குரியது. பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் இதை நிறுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரி வித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறை தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வன்முறையால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திரிபுரா மக்கள் மீது தொடுக்கப்படும் கொடூரத் தாக்குதல் முடிவுக்கு வர வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். கடந்த நான்கு வாரங்களில், திரிபுராவின் நகர மற்றும் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்தும் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்த இத்தகைய கொடூரமான தாக்கு தல்களை கண்டித்து, அனைத்து ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்திற்கும்  தயார்: கே.எஸ்.அழகிரி 

சென்னை, ஏப்.4-  ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து  காங்கிரஸ் கட்சி சார்பில் கோயம்பேட்டில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எந்த தவறும் செய்யாத ராகுல் காந்திக்கு இதுவரை எந்த நீதிமன்றமும் வழங்காத தண்டனையை சூரத் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது”என்றார். மோடியை எதிர்த்து பேசினால் தேச துரோகியா? ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் போது அதை காக்க எந்த தியாத்தையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நிலக்கரி சுரங்கத்தை ஒருபோதும்  தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: உதயநிதி

சென்னை, ஏப்.4- பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள் வது தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் சட்டப்பேர வையில் விளக்கமளிப்பார் என்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  காவிரி டெல்டா மாவட்டங் களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகை யையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்டப் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக திருவாரூரில்  செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், “பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனு மதிக்காது. நிலக்கரி சுரங்க  விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிப்பார்” என்றார்.  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “ பாது காக்கப்பட்ட வேளாண் மண்ட லத்தில் விவசாயத்திற்கு பாதிப்பு  ஏற்படும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தக் கூடாது  என்ற சட்டம் உள்ளது. எனவே, வேளாண் சார்ந்த பணிகள் தான் மேற்கொள்ளப் படும், வேறு  எந்தப் பணிகளும் மேற்கொள் ளப்படாது என்று முதல்வர் உறுதி யளித்து உள்ளார். பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கம் போன்ற பணிகளை தொடங்க அனுமதி இல்லை. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம்.”என்றார்.

தமிழ்நாட்டில்  எச்பிபி வகை கொரோனா பரவல்

சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 91 விழுக்காட்டி னருக்கு எச்பிபி வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்து விட்டது. செவ்வாயன்று (ஏப்.4) மட்டும் 186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. மேலும்,  கொரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார  நிலையங்களுக்கு வரும் நோயாளி கள், பார்வையாளர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று உறுதி  செய்யப்பட்டவர்களில் 91 விழுக் காட்டினருக்கு எச்பிபி வகை  கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி முதல் மார்ச் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 144 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 86 மாதிரிகள் தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றவர்களிடமிருந்தும், 36 மாதிரி கள் சமூகத்தில் இருந்தும், 20 மாதிரிகள் வெளிநாடுகளிலிருந்து வந்த வர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது. இந்த எச்பிபி வகை தொற்று வேக மாக பரவக் கூடியதாக உள்ளது.  தும்மல் மூலமாக கூட அடுத்தவர்க ளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது பாதிப்பு எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஆனால், மரணங்களின் எண்ணிக்கை குறை வாகவே பதிவாகி வருகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. மேலும், இந்த வகை வைரஸ்களில் வீரியம் குறைவாகவே உள்ளது. வேகமாக பரவும் என்கிற காரணத்தால் தான் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆசியாவில் அதிக வளர்ச்சி

ஆசிய வளர்ச்சி  வங்கி கருத்து

ஆசிய வளர்ச்சி  வங்கி கருத்து மணிலா, ஏப்.4- ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிக அளவில் இருக்கப் போகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கி கருத்து தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஆசியப் பொருளா தாரத்தின் வளர்ச்சி 4.2 விழுக்காடு அளவில் இருந்தது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணிப்புகள் வளர்ச்சி குறித்து குழப்பமான கருத்துகளே நிலவி வந்தன. ஆனால், தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி, இந்த இரு ஆண்டுகளில் ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 4.8 விழுக்காடு ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. சீனாவில் போடப் பட்டிருந்த கடுமையான கொரோனா தடை கள் தளர்த்தப்பட்டதே இந்தக் கணிப்பு க்குக் காரணமாகும். பசிபிக் நாடுகளும் 4.8 விழுக்காடு அளவில் வளரும் என்று வங்கியின் அறிக்கை கூறுகிறது. நுகர்வு அதிகரிப்பு, சுற்றுலாத்துறைக்கு கிராக்கி மற்றும் முதலீடுகள் ஆகியவை இந்த வளர்ச்சி யைத் தரவிருக்கிறது. இலங்கை குறித்த மதிப்பீட்டில், வளர்ச்சிக்கான அறிகுறி களை ஆய்வறிக்கையால் தர முடிய வில்லை. கடந்த ஆண்டில் 7.8 விழுக்காடு அந்நாட்டின் பொருளாதாரம் சுருங்கியது என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருக் கிறது. சீனாவின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வறிக்கை, உக்ரைன் நெருக்கடி இன்னும் நீங்காததையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. சீனாவோடு, இந்தியா, இந்தோனேசியா, பிலிப் பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுக ளும் வரும் இரண்டு ஆண்டுகளில் நல்ல பொருளாதார வளர்ச்சி எட்டும் என்று ஆய்வறிக்கை மதிப்பீடு செய்துள்ளது.