states

தோழர் சி.எச்.பாலமோகனன் பணியை முன்னெடுப்போம்!

புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு அரசு ஊழியர்களுக்காக இயங்கிக் கொண்டி ருந்த என்ஜிஓ சங்கம் ஊழியர்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருக்கவில்லை. 1970ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஊழி யர்கள் ஊதியம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசு ஊழியர்களிடையே வலுப்பெற்று வந்தது. ஒன்றிய அரசு ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டது.  தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றிய அரசு ஊதியம் சம்பந்தமாக முரண்பாடுகள் எழுந்தன. என்ஜிஓ சங்கம் இவற்றில் உரிய தலையீடு இல்லை எனக் கூறி பல்வேறு சங்கங்கள் தனியாக முயற்சி மேற்கொண்டன. ஆனாலும் வெற்றி பெறவில்லை. அந்த சங்கங்களின் மீதான நம்பிக்கையை ஊழியர்கள் இழந்தனர். ஒன்றிய அரசு ஊழியர்களின் 3ஆவது ஊதிய குழுவின் மோசமான பரிந்துரை கள் அதிருப்தி அடைய செய்தது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அந்த பரிந்துரை அதிருப்தியை ஏற்படுத்தியது. எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தக் கூட நிர்வாகம் முன் வராததால் அந்த ஊழியர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் ஊழியர்களின் நம்பிக்கையை பெற்று இயங்கிக் கொண்டிருந்த என்எஃப்பிடிஇ (தபால் தந்தி), ஜிப்மர் தொழிலாளர் சங்கம், இன்சூரன்ஸ் (ஏஐஐஇஏ) மற்றும் புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து “ஒன்றிய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் பேரவை'' என்ற அமைப்பை 1973இல் துவங்கினார்கள்.  மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைள் வெற்றிபெற பேரவை நேரடியாக தலையீடு செய்தது. இதனால் ஊழியர்களின் நம்பிக்கையை பெற்றது. 1975ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது தொழிலாளர்களின் இயக்கங்களிலும், போராட்டங்களிலும் எதிரொலித்தது. 

புதுச்சேரி அரசு நிர்வாகம் அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை அவர்களிடம்தான் பேச முடியும் என்ற நிலைபாட்டை மேற்கொண்டது. அதன் காரணமாக பேரவையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களை ஒருங்கிணைத்து சம்மேளனம் உரு வானது. இது ஒரே அமைப்பாக செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது.  1979இல் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடலாம் என அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் எடுத்த முடிவை எதிர்த்து போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் சம்மேளனமும் முழுமையாக பங்கேற்றது. தோழர் பாலமோகனன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தின் வீச்சு காரணமாக இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது.  அதன்பிறகு, சம்மேளனம் ஒரு பெரிய சக்தியாக தடம் பதித்தது. தோழர் பாலமோகனன் வழிகாட்டலில் மக்கள் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண்தானம், ரத்த தானம், மரக்கன்றுகள் நடுவது. மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது, மக்கள் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய திட்டங்கள், தீண்டாமை கொடுமையை, புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் மயமாகும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு. நெகிழிகள் பயன்படுத்துவதை தவிர்க்க முன்னெடுப்பு என பன்முகத்தன்மை கொண்ட ஒரு இயக்கமாக சம்மேளனத்தை செயல்படுத்தினார்.

அனைத்து தரப்பு மக்களின் அன்பையும், அவர் ஆதரவையும் ஒருங்கே பெற்றார். அரசு ஊழியர்கள் என்பவர்கள் தனித்தீவல்ல அவர்களும் மக்களின் ஒரு அங்கமே என உணர வைத்தார். இவ்வாறெல்லாம் செயல்பட்ட காரணத்தால் “மாமனிதன்” என்ற பட்டம் அவருக்கு அளித்து பெருமைப்படுத்தப்பட்டது. அவரது செயல்பாடுகள் மார்க்சிய சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளன.  இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற தலைவர்களின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தோழர் பாலமோகனின் மறைவு நிச்சயமாக ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்நாளில் அவரது செயல்பாடுகளை, தியாகத்தை போற்றும் வகையில் அவர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற நாளும் உறுதி ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை திறப்பை போற்றுவோம், அவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாக அவர் காட்டிய வழியில் நடப்போம்.

-கே. முருகன்
(முன்னாள் ஒன்றிய, மாநில அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர்)