states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள ஆளுநரின் கடிதத்துக்கு முதல்வர் பதில் ‘நிதி அமைச்சரை பதவி நீக்க முடியாது’

திருவனந்தபுரம், அக்.26- கேரள நிதியமைச்சர் கே.என்.பால கோபாலை பதவி நீக்கம் செய்யக் கோரி  ஆளுநர் ஆரிப் முகமது கான் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்துக்கு ‘நிதி அமைச்சரை மாற்றம் செய்ய முடியாது’ என்று  முதல்வர் பதி லளித்துள்ளார். செவ்வாயன்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பேசியது தனக்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும் எனவேஅமைச்சரை பதவி  நீக்கம் செய்ய வேண்டும் என்பதும் ஆளுநரின் கோரிக்கை. ஆளுநரின் கோரிக்கையை முதல் வர் பினராயி விஜயன் நிராகரித்தார். இந்த ஒரு காரணத்திற்காக நிதி அமைச்சரை மாற்ற மாட்டோம் என்று முதல்வர் பதிலளித்தார்.

தெலுங்கானாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் ஓட்டம்!

முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் சுவாமி கவுட், ஸ்ரவண் தசோஜு ஆகிய இரு தலை வர்கள் பாஜகவில் இருந்து விலகி அண்மையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில்  இணைந்தனர். இந்த வரிசையில், தெலுங்கானாவில் பாஜக தலைவர் ரபோலு ஆனந்த் பாஸ்கரும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். “கட்சியில் இருந்து  விலகும்போது, நான் குற்றம் சாட்டுவது கண்ணியமானதாக இருக்காது. ஆனால், உங்கள் (பாஜக) அனைவரையும் நேர்மையாக சுய பரிசோதனை செய்ய தாழ்மையுடன் அழைக்கிறேன்” என்று பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கடிதம் ஒன்றையும் ரபோலு ஆனந்த் பாஸ்கர் எழுதியுள்ளார்.

ராஜ்நாத் சிங்குடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச்சு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்திக்  குறிப்பு வெளியிட்டிருக்கும் பாதுகாப்புத்துறை, “ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று உரையாடினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ரஷ்ய அமைச்சர் விளக்கினார். அப்போது, இரு நாட்டிற்கிடையே மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியப் பிரதமர் ஆவாரா?

பிரிட்டனில் ரிஷி சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது போல, இந்தியாவில் ஹிஜாப் அணிந்த  பெண்ணை இந்தியப் பிரதமராகப் பார்க்க விரும்புவதாக மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி கூறியுள்ளார். ஆனால், “இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லிம் அடையாளத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே பாஜகவின் உண்மையான செயல் திட்டமாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, “ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரத மராக வருவார் என்று ஒவைசிஜி நம்புகிறார்! சரி, அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடை செய்ய வில்லை, ஆனால் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் மஜ்லிஸ் கட்சியின் தலைவராக எப்போது வருவார் என்று சொல்லுங்கள்?’’என பாஜக-வின் ஷெஹ்சாத் பூனவல்லா எதிர்க்கேள்வி எழுப்பி யுள்ளார்.

ஆன்மீகமே மனிதனை முழுமையாக்குகிறதாம்: தன்கர் பேச்சு

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்ம குமாரிகளின் உலகத் தலைமையகத்தில் பிரம்ம குமாரிகளின் 85-வது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உரையாற்றியுள்ளார். அப்போது, “ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை நிறைவடையாது. ஆன்மிகத்தை கடைபிடிக்காவிட்டால் உலகம் முழு வதும் தற்போது நடைமுறையாகிவிட்ட தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தி விடும்” என்று பயமுறுத்தியுள்ளார். மேலும், “நமது கல்வியில் ஆன்மீகம் என்பது இன்றியமையாத பகுதி எ்ன்றும்; இதுவே ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘பாரத் மாதா கி ஜெய் சொன்னால் முஸ்லிம் பிரதமராவார்’

“இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் “பாரத் மாதா கீ ஜெய்”, “வந்தே மாதரம்” எனச் சொல்லும் போது இந்தியா ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ளும்” என்று ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட இயக்குநரும், பாஜக ஆதரவாளருமான விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார். பிரிட்டன் ஒரு இந்துவை பிரதமராக ஏற்றுக்கொண்டது போல, “இந்தியா எப்போது ஒரு முஸ்லிமை பிரத மராக ஏற்றுக்கொள்ள (தேர்ந்தெடுக்க) தயாராகும்” என்று அர்பா கானும் ஷெர்வானி என்ற பத்திரி கையாளர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாகவே விவேக் அக்னி ஹோத்ரி இவ்வாறு வன்மமாக குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் 15 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை

தெலுங்கானா மாநிலம் வனபார்தி மாவட்டத்தில் உள்ள பதாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வர்கள் ராஜசேகர் - சுனிதா தம்பதி. இவர்களின் இளைய மகளான கீதா (15) பெப்பெரூ டவுனி லுள்ள இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ சேகர் செவ்வாய்க்கிழமையன்று வீட்டிலிருந்த கோடாரியால் கீதாவை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராஜசேகர் தற்போது காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

பெண் விவகாரத்தால் கர்நாடக மடாதிபதி தற்கொலை!

கர்நாடக மாநிலம் பண்டே மடத்தின் பசவலிங்க சுவாமிகள் (45) கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். அதில், பெண் விவகாரத்தில் மிரட்டப்பட்டே தற்கொலை செய்து கொண்டதாக பசவலிங்க சுவாமிகள் தெரிவித்துள்ளார். ‘அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கி, அவர் மீது மோகத்தில் விழுந்தேன். இதை ‘வீடியோ’வில் பதிவு செய்து, தினமும் என்னை இம்சிக்கின்றனர். ‘இந்த சதி வலையை பின்னியது, எனக்கு வேண்டப்பட்ட மற்றொரு மடத்தின் சுவாமிகள். அந்த சதிக்கு நான் பலியாகி விட்டேன்’ என பசவலிங்க சுவாமிகள் விவரித்துள்ளார்.

அசுத்தமான தண்ணீரால் 2 பேர் பலி; 40 பேர் சுகவீனம்

கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தின் ஷாஹாபுரா தாலுகாவிற்கு உட்பட்டது ஹோத்பேட் கிராமம். இங்குள்ள மக்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 40-க்கும்  மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஹொன்னப்ப கவுடா மற்றும் ஏர்ரம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பழைய கிணற்றில் இருந்து குழாய் இணைப்புகள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீரை குடித்ததே வாந்தி, பேதிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

நிதிஷ் பாஜகவுடன் சேருவார் என்பது வதந்தி: தேஜஸ்வி 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மீண்டும் பாஜக அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக வகுப்பா ளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், “நிதிஷ்குமார் மீண்டும்  பாஜக அணியில் சேரமாட்டார். எங்கள் மகா கூட்டணி வலிமையாக உள்ளது. பாஜக-வை ஆட்சி யில் இருந்து அகற்றி, வலிமையான அரசை நடத்தி வருகிறோம். சிலர் வதந்தியை கிளப்பினா லும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம். அடுத்த வாரம் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் துணைமுதல்வருமான தேஜஸ்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வரை தள்ளிவிட்ட மோடியின் பாதுகாப்பு வீரர்

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் குஜராத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். அப்போது, மோடியின் காரில் ஏற முயன்ற மாநில முதல்வர் பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத் தின் முதல்வர் இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் தீபாவளியன்று மதவன்முறை கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு; 19 பேர் கைது

அகமதாபாத், அக். 26 - குஜராத்தின் வதோதரா நகரிலுள்ள பனிகேட் பகுதியில் ஒரு பக்கம் இந்துக்கள், மறுபுறம் முஸ்லிம்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், தீபாவளியன்று- அதாவது செவ்வா யன்று அதிகாலை 12.45 மணியளவில் பனிகேட் பகுதியில் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. இருப்பினும் அந்த நேரத்தில் பட்டாசுகள் வெடித்ததில் இரு மதத்தவரிடையே பிரச்சனை ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டதுடன், வாகனங்கள் அடித்து நொறுக்கிச் சூறையாடப்பட்டுள்ளன. குறிப்பாக, பனிகேட் பகுதியில் உள்ள முஸ்லிம் மெடிக்கல் சென்டர் அருகே கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், அவர்கள் மீதும் பெட்  ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதில்  யாரும் காயம் அடையவில்லை. அந்தப் பகுதியில் நிறுத்திவைக் கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பட்டாசு பறந்து வந்து விழுந்ததால் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்நிலையில், நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், சிசிடிவி-க்களை பார்த்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ள காவல்துறை துணை ஆணையர் யஷ்பால் ஜகாங்கியா, சம்பவம் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் கண்கள் சிதைக்கப்பட்டு தலித் இளைஞர் கொடூரக் கொலை!

மீரட், அக். 26 - உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஜலால்பூர் கிரா மத்தில் 30 வயது தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஜலால்பூரைச் சேர்ந்த பிஜேந்திரா என்பவரின் மகன் பிரிஜ்பால். தலித் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். கூலி வேலை செய்து வருகிறார். இவரை, கடந்த அக்டோபர் 24 அன்று இரவு 8 மணியளவில், இதே கிராமத்திலுள்ள குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த சோனு, சச்சின் ஆகிய 2 இளைஞர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 25 அன்று காலை ஜலால்பூர் கிரா மத்தில் பிரிஜ்பால் கண்கள் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.  தகவலறிந்து வந்த தலித் மக்கள், பிரிஜ்பாலின் கொடூரமான கொலைக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், இஞ்சௌலி காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இந்த கொலைச் சம்பவத்தால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் தலைமறை வாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விதி மீறல்: 126 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ்

சென்னை, அக். 26 - தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம், வசூலிக்கப்படுவதை தடுக்க போக்கு வரத்துத் துறை குழுக்களை அமைத்து கண்காணித்தது. தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் கடந்த வாரம்  முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் வடக்கு மற்றும் தெற்கு  மண்டலமாக பிரித்து வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். பெர்மிட், கூடுதல் லக்கேஜ், போக்கு வரத்து ஸ்டிக்கர் ஒட்டாதது, தகுதி சான்று இல்லாமல் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு உடனடி அபராதமாக ரூ.89 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 500 அபராதம்  விதிக்கப்பட்டது. அதேபோல் தெற்கு மண்டலத்திலும் நடந்த சோதனையில் அபராதம் மற்றும் சோதனை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி  பண்டிகை சோதனையில் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் நடவடிக்கை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு

சென்னை, அக். 26- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற் கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். 2022 ஜூலை 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடை பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த  நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவின் அடிப்படையில், பதவி  உயர்விற்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுவை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர்  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9  ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதி லிருந்து, அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை  ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங் குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டார். மேலும் கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்த  வழக்குகளை தள்ளுபடி செய்தார். 

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி உருவம் இடம்பெற வேண்டுமாம்

பிரதமருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

புதுதில்லி, அக்.26- தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின்  ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தலை முன்னிட்டு  புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் படத்தை சேர்க்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் கெஜ்ரி வால் கூறுகையில், நிதித்துறையில் செழிப்பைக் கொண்டுவர லட்சுமி தேவி  மற்றும் விநாயகப் பெருமானின் உரு வத்தை சேர்க்க வேண்டும் என்று தெரி வித்துள்ளார். இந்திய ரூபாய் நோட்டு களின் ஒரு பக்கத்தில் காந்திஜியின் உரு வப்படம் உள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும். மறுபுறம், விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் உருவம் சேர்க்கப்பட்டால், நாடு முழுவதும் அது ஆசீர்வதிக்கப்படும். 85 சதவிகித இஸ்லாமியர்கள் வாழும் இந்தோனேசியாவின் கரன்சியில் விநாயகப் பெருமானின் உருவம் உள்ளது. அங்கு இரண்டு சதவிகிதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர் என கெஜ்ரிவால் கூறினார்.

தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில்  இந்தியா முக்கிய பங்கு வகித்தது

 அமெரிக்கா பாராட்டு

வாஷிங்டன், அக்.26-  கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு  வகித்ததாக அமெரிக்கா பாராட்டு தெரி வித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஒருங்கிணைப் பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜா பேசும்போது, ‘‘இந்தியா தனது மிகச் சிறப்பான உற்பத்தி திறனால் தடுப்பூசிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. உலக நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சி யால் கோவாக்ஸ் திட்டம் மூலம் சுமார்  100 நாடுகள் வரை தடுப்பூசியை இலவச மாக பெற்றன. நாங்கள் தொடர்ந்து தடுப்பூசி யை தானமாக அளித்து வருகிறோம். தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் கிடை க்க வேண்டும் என்று நினைக்கும் நாடுதான் அமெரிக்கா’’ என்று தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது கொலம்பிய இடதுசாரி அரசு முனைப்பு

பொகோடா, அக்.26- கொலம்பியாவின் ஜனாதிபதி யாகத் தேர்வு செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் குஸ்தவோ பெட்ரோவின் அரசு தேர்தல் காலத்தில் தரப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது. கொலம்பியாவின் வரலாற்றில் முதன்முறையாக இடதுசாரி அரசியல் தலைவர்களின் ஒருவர் ஜனாதிபதி யாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டிருந்தன. ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள குஸ்தவோ பெட்ரோ, வாக்குறுதி களை நிறைவேற்றும் நோக்கத்துடன் பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார்.  இதன் ஒருபகுதியாக, தொழி லாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசுத்தரப்பு என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியிருக்கிறது. முதல் கட்டத்தில், இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். 2023-ஆம் ஆண்டில் இருந்து இந்தக் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைக்கு வரும் என்றும், டிசம்பர் 30, 2022க்குள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று, முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அளவிலான உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், தொழிலாளர்கள் தரப்பில் 15 முதல் 20 விழுக்காடு உயர்வை எதிர்நோக்குகின்றனர். முதலாளிகள் தரப்பில் 13 முதல் 15 விழுக்காடு வரை யிலான சம்பள உயர்வை முன்வைப் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசு என்பதால் தொழி லாளர்கள் பக்கம் நிற்கும் என்றும் கருதுகிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஊதிய உயர்வோடு, ஓய்வூதியம் மற்றும் அடுத்தாண்டு நாடாளு மன்றத்தின் முன் வைக்கப்படும் தொழிலாளர் நல சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப் போகிறார்கள்.