சென்னை,மார்ச் 7- தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், புலம்பெயரும் தொழிலாளர் சட்டத்தை கறாராக அமல்படுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: வரலாற்று ரீதியாக புலம் பெயர்தல் என்பது காலங்காலமாக உலகளவில் நடந்து வருகிறது. இடம் பெயர்தல் என்பது ஒரு நாட்டிற்குள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லுதல், மாநிலத்திற்குள்ளேயே மாவட்டம் விட்டு மாநிலம் செல்லுதல் மற்றும் நாடு விட்டு நாடு செல்லுதல் ஆகிய முறைகளில் கோடிக் கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பிற்காக இடம் பெயர்கின்றனர். இந்திய நாட்டு ஒரு குடிமகன் நாட்டின் எல்லை முழுவதும் நடமாடுவதற்கும், நாட்டின் எந்த பகுதி யிலும் குடியேறுவதற்கும், வேலை செய்வதற்கும் இந்திய அரசயலமைப்பு சட்டம் 1950 பிரிவு 19 (1)-ன் உட்பிரிவு இ மற்றும் ஈ ஆகியவை சட்டரீதியான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் நவீன தாராளமய கொள்கையால் ஏற்படும் தாக்குதல், வருமான ஏற்றத்தாழ்வுகள், விவசாய நெருக்கடிகள், வேலையின்மை போன்ற பிரதான காரணங்களால் கிராமப்புறங்களை விட்டு நகரப்புறங்களுக்கு இடம் பெயர்தல் மற்றும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களிலிருந்து முன்னேறிய மாநிலங்களுக்கு இடம் பெயர்வது கடந்த 8 ஆண்டுகளில் அதிகரித் துள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், அசாம், சத்தீஸ்கர் உட்பட வடகிழக்கு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமானம், ஜவுளி உற்பத்தி, தனியார் தொழிற்சாலைகள், மெட்ரோ ரயில், வீட்டு வேலை, உணவு விடுதிகள், பெட்ரோல் நிலையங்கள் என அனைத்து விதமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு குறிப் பிடத்தக்கது. இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, குடியிருப்பு, சுகாதாரம் உள்ளிட்ட சட்டப் படியான உரிமைகளுக்காக சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் இத்தொழிலாளர்களை அச்ச மூட்டும் வகையில் தமிழ்நாட்டில் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, இவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான தகவல்களை ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி மாநிலங்களுக்கிடையே பகைமையை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழ் நாட்டில் மொழி ரீதியிலான பிரிவினை ஏற்படுத்து வதை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
குரல் கொடுக்க வேண்டும்
இத்தொழிலாளருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அமைப்புகள் உண்மையில் இவர்கள் மீது அக்கறையிருக்குமானால் இவர்கள் பணியிடங்களில் படும் கஷ்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வெளி மாநிலத்தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதை இரு தரப்பு தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய அமைப்புகளை புறந்தள்ள வேண்டும்.
தனிக்கவனம் தேவை
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல்களை பரப்புவதோடு, தமிழ் நாட்டு மக்களை கொடூரகாரர்களாக சித்தரிக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், புலம் பெயரும் தொழிலாளர் களை பாதுகாக்க 1979இல் உருவாக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பதிவு, அடையாள அட்டை, வேலையின் தன்மை, வேலைய ளிப்பவர், குடியிருப்பு, மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட அடிப்படையான அம்சங்களை நிறைவேற்றி புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.