சென்னை, ஜன.12- தமிழ்நாட்டின் 150 ஆண்டு கால கனவு திட்டம் சேது கால்வாய் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(ஜன.12) கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது கால்வாய் திட்டம் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை முன்மொழிவதே வரலாற்றுக் கடமை. இது பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம், கலைஞரால் நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம். பாக் நீரிணையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேது கால்வாய் திட்டம்.
திட்டம் எப்படி உருவானது?
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு தலைமையில் 1963 ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, ‘தம்பிக்கு’ எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சேது கால்வாய்த் திட்டத்தை நிறை வேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்’ என்று பேரறிஞர் அண்ணா எழுதினார். இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவ தற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்கள். 1972 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அன்றைய முதலமைச்சர் கலைஞர் இதனை வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்றும் முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்திப் பேசினார்.
தடைபோட்ட பாஜக
1998 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியை ஒதுக்கினார். பாஜக ஆட்சியில்தான் சேது கால்வாய் திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு. க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு ரூ.2,427 கோடி ஒதுக்கப் பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங் களுக்காக பாஜக சார்பில் இத்திட்டத் துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது . இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார். இந்த அரசியல் முட்டுக் கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும். சேதுகால்வாய் திட்டம் நிறை வேற்றப்பட்டால் நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வர்களுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது கால்வாய் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பாஜக அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்” என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக் கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு பாஜக அரசு வந்துள்ள நிலையில் சேது கால்வாய் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.