states

தொழிலாளர் விரோத சட்ட திருத்தத்தை திரும்பப்பெற சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 22- தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தலைவர் எல்.ஆர்.சங்கர், பொதுச்செயலாளர் வ.மணி மாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் - 2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி என்பதிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தவும் தொழில் நிறு வனங்கள் விருப்பம் போல் வேலைச் சுமையை அதிகரித்துக் கொள்ளவும் வழி அமைத்து தருகிறது. தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொழி லாளர் விரோத நடவடிக்கையாகும். தொழி லக பாதுகாப்பு நலவாழ்வு மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் சட்டத்தை 2020ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அர சால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அந்தச் சட்டத்தை திமுக அரசு செயல்படுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 1923ஆம் ஆண்டு சிங்காரவேலரால் மே நாள் கொண்டாடப்பட்டது. அதன் 100ஆவது ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் மக்கள் விரோத திருத்த சட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.