வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
புதுதில்லி, மே 14 - கர்நாடக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் பெங்களூரு சென்றுள்ளனர் என்றும் எம்எல்ஏக்க ளின் கருத்தை அவர்கள் மேலிடத்திற்கு தெரிவிப்பார்கள் என்றும் அதன்பின் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மக்கள் காங்கிரசுக்கு வரலாறு காணாத அளவில் வாக்குகளை வழங்கியுள்ளனர். பாஜக ஆட்சியை வீழ்த்தியுள்ளனர். தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் நிறைவேற்றும். கர்நாடகத்தில் நல்ல ஆட்சியை தருவோம் என்றும் பாஜக பரப்பிய மதவெறி திட்டங்களை பின்னுக்குத் தள்ளுவோம் என்றும் கூறினார்.
சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமனம்
புதுதில்லி, மே 14- மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு புதிய இயக்குநராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் அடங்கிய குழு சிபிஐ இயக்குநரை தேர்வு செய்கிறது. இந்நிலையில் கர்நாடக போலீஸ் டிஜிபியாக இருந்த பிரவீன் சூட் என்பவரை சிபிஐ இயக்குநராக நியமித்து, இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986 பேட்ச் ஐபிஎஸ் அதி காரியான பிரவீன் சூட், தற்போது சிபிஐ இயக்குந ராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவு பெற்றதும் சிபிஐ இயக்குநர் பதவியை ஏற்பார்.
கள்ளச்சாராய விற்பனையை தடுத்திடுக: சிபிஎம்
சென்னை, மே 14- கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விழுப்புரம் மாவட்டம் மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் அறிவித்துள்ளதும், மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிர மும், சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தர விட்டுள்ளது ஆறுதலை தருகிறது. தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து வருவது அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பது தொடர்பான குற்றங்கள் 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது டன், 11,828 பெண்கள் உட்பட 1,39,697 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.1,77,99,900 மதிப்புள்ள சாராய ஊறல் ரூ.2,07,20,760 மதிப்புடைய கள்ளச்சாராயம் ரூ.31,21,700 மதிப்புடைய எரிசாராயம் கைப்பற்றிய தாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளதிலிருந்து கள்ளச்சாராய விற்பனை சரளமாக நடந்து வருவதை அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் மது விலக்கு அமலாக்கப்பிரிவின் நிர்வாகத் திறமையின்மையும், உள்ளூர் காவல்துறையினர் கள்ளச்சா ராய வியாபாரிகளுடன் கொண்டுள்ள கூட்டு உறவின் காரணமாக கள்ளச்சா ராய விற்பனை தொடர்வதும், உயிரி ழப்புகள் ஏற்படுவதும் நடந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினை செயல்திறன் மிக்கதாக மாற்றுவது டன், கள்ளச்சாராய பேர்வழிகளோடு உறவு கொண்டுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை யை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பஜ்ரங் தள் அமைப்பிற்குத் தடை? அஞ்சவில்லையாம் விஎச்பி
இந்தூர், மே 14- கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஜாதி, மதத்தின் பெயரால் வெவ்வேறு சமூகத்தி னர் இடையே வெறுப்புணர்வை பரப்பினால் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தற்போது காங்கிரசே ஆட்சிக்கு வந்து விட்டது. இந்நிலையில், ‘பஜ்ரங் தள்’ அமைப்பிற்கு தடை விதிக்கப்படுமா? என்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “கர்நாட கத்தில் தமக்கு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு பஜ்ரங் தளம் அஞ்சவில்லை. ஒருவேளை இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு காரணமாக பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று மிலிந்த பராண்டே தெரிவித்துள்ளார். ‘பஜ்ரங் தள்’ என்பது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை உயரும்
சென்னை, மே 14- தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் மே 18ந்தேதி வரை 5நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் மழை பெய்த போதும் மாநிலம் முழுவதும் நிலவும் வெப்பநிலை கடுமையானதாக உள்ளது.
தாயின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்: முதல்வர்
சென்னை, மே 14- தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்று வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத் திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப் பங்களையும் மதிப்போம், நிறை வேற்றுவோம்! இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
நிதியுதவி
சென்னை, மே 14- தூத்துக்குடி மாவட்டம், சிவலார் பட்டி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் கார்த்திகேயன் மகன் சுதன் ஆகியோர் இம் மாதம் 12 ஆம் தேதி சிவலார் பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “சிறுவர்கள் பலியான செய்தி கேட்டுமிகுந்த வேதனை யடைந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த சிறுவர்களின் குடும் பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கில் ரூ.3லட்சம் திருட்டு
சென்னை, மே 14- திருச்சியிலுள்ள தனியார் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா காலகட்டத்தில், முது நிலை மாணவி பவித்ரா பணியாற்றி னார். அதற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை, அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. கணக்கில் வைத்திருந்த, 3.20 லட்சம் ரூபாயில், 3 லட்சம் ரூபாயை, பே-டிஎம் வாயிலாக யாரோ திருடி விட்டதாக, வங்கியிடமும், சைபர் பிரிவு காவல்துறையிலும், பவித்ரா புகார் அளித்தார். இதையடுத்து, பணத்தை திருப்பித் தரவும், புகார் மீது விசாரணை நடத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் பவித்ரா வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், வங்கி தரப்பிலும், பே-டிஎம் தரப்பிலும் அளித்த தகவலின்படி, மனுதாரர் எந்த மோசடி நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை என்பது தெளிவாகிறது. வங்கி நிர்வாகத்திடம், மனுதாரர் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, பே-டிஎம் நிறுவனத்திடம், வங்கி நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளது. தன் பொறுப்பை பே-டி.எம் நிறுவனம் தட்டிக் கழிக்க முடியாது. ரிசர்வ் வங்கி வழிமுறைகளை பே-டி.எம் நிறுவனம் மீறும்போது, அதில் தலையிட வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பை, இரண்டு வாரங் களில் பே-டி.எம் நிறுவனம் ஈடுகட்டும் படி, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்த ரவிட்டுள்ளார்.
அரசு மணிமண்டபங்களில் போட்டித் தேர்வர்கள் படிக்க ஏற்பாடு
சென்னை,மே 14- போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசின் அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பயன் படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று செய்தித் துறை அலு வலர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார். சென்னையில் ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை தலை மைச் செயலாளர் இறையன்பு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், காம ராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திரு வல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதி யார் நினைவு இல்லம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண் ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகிய வற்றை பார்வையிட்டு அரங்கங்கள் மற் றும் மணிமண்டபங்களை பொது மக்கள் அதிக அளவில் பார்வையிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், போட்டித் தேர்வு களில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ மாணவியர்கள் இது போன்ற அரங்கங்கள் மற்றும் மணிமண்ட பங்களை பயன்படுத்திக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்றும் செய்தித் துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
பொறியியல் படிப்புக்கு 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை, மே 14- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (மே 14) அந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது 1 லட்சத்தை கடந்து அவர்களில் 46 ஆயிரத்து 10 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் 17 ஆயிரத்து 618 பேர் சான்றிதழ்களை பதி வேற்றம் செய்துள்ளனர். பொறி யியல் படிப்புக்கான விண்ணப் பப்பதிவு ஜூன் 4 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பெரும் பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறி யியல் சேர்க்கைக் குழுவினர் தெரிவித்தனர்.
இஞ்சி கிலோ ரூ.200-க்கு விற்பனை
சென்னை, மே 14- கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 14) இஞ்சி வரத்து மேலும் குறைந்த தால் அதன் விலை, புதிய உச்சம் தொட்டது. ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் இஞ்சிக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த விலை உயர்வு வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும்’ என்றார்.
நாளை துர்க்கியே ஜனாதிபதி தேர்தல் எர்டோகன் தொடர்வாரா?
அங்காரா, மே 14- மே 14 (ஞாயிறன்று) துர்க்கியே நாட்டின் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 2003-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் ரிசெப் தய்யீப் எர்டோகன் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். அவருடைய நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி எர்டோகன் மீது அதிருப்தி இருப்பதால், எட்டு கோடியே 50 லட்சம் மக்கள் வாழும் துர்க்கியேவில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். முதன்முறையாக எதிர்க்கட்சிகள் ஒருதரப்பில் திரண்டுள்ளன. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான கேமல் கிளிக்டரோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பசுமை-இடதுசாரிக் கூட்டணி தனி அணியாகக் களம் காண்கிறது. மொத்தமுள்ள 600 இடங்களில் 100 இடங்களைப் பெற்றாக வேண்டும் என்ற உறுதியுடன் தங்கள் பிரச்சாரத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்த ஹிஸ்யார் ஓஸ்சோய், “ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்களை துர்க்கியே சந்தித்து வந்துள்ளது. பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கிறது. பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. சமச்சீரற்ற நிலை பரவலாகவும், செல்வ விநியோகம் நேர்மையற்ற வகையிலும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டம் தோறும் ஜவுளிச் சந்தை அமைக்க கோரிக்கை
இராஜபாளையம், மே 14- தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலக் குழுக் கூட்டம் இராஜபாளையத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.சந்திரன், பொருளா ளர் அசோகன் மாநில நிர்வாகி சோமசுந்தரம் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையால் வேலை இழந்து வருவாய் இழந்து தவிக்கின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மாத ஊதியமாக ரூ.26,000 வழங்கவேண்டும். ரூ.10,000 பென்ஷன் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். மாவட்டங்கள் தோறும் ஜவுளிச் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகச் செய்திகள்
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடார் கையெழுத்திட்டுள்ளது. லத்தீன்-அமெரிக்க நாடுகளில் சிலி, பெரு மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நான்காவது நாடாக இத்தகைய உடன்பாட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். உடனடியாக, சீனாவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களில் 50 விழுக்காடு சரக்குக்கு வரிகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களுக்குள் நடக்கும் சண்டையால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்வதாக சூடானில் சண்டையிட்டு வரும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள் ளன. ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சண்டை தொடங்கியது. அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சவூதி அரேபியாவின் தலையீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. சவூதியின் துறைமுக நகரமான ஜெட்டாவில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு கையெழுத்தானது.
இலங்கையின் விமானப் போக்குவரத்து நிறுவனமான இலங்கை ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டில் மட்டும் 52 கோடியே 25 லட்சம் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்திருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்க கடன் தர ஐஎம்எப் ஒப்புக் கொண்டுள்ளது. அதே வேளையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் போட்டிருக்கிறது. இலங்கையும் 51 நிறுவனங்களைப் பட்டியல் இட்டு வைத்துள்ளது.