states

ஆளுநரை நீக்கக்கோரி வழக்கு

சென்னை, நவ. 29- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தஞ்சை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கை களுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறார். ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர்  பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடி யது. அதையும் மீறி அவர் தலைவராக உள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார் என மனுவில்கூறியுள்ளார். ஆளுநரை பதவிநீக்கக் கோரும் இந்தமனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநருக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆளுநருக்கு எதிராக புகார் மனு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினர். இந்தநிலையில் ஆளுநரை பதவிநீக்கம் செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

;