ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய அச்சத்தாலும், சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாலும், நடுத்தர மக்கள் கூட பாதுகாப்பு கருதி விமான பயணத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால், அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனம் என ஒன்று இந்தியாவில் இல்லாத நிலையில், பொதுமக்கள் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி பல விமான சேவை நிறுவனங்கள் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளன. வழக்கமாக சென்னையில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஷ்வருக்கு செல்ல, விமானத்தில் 5000 ரூபாயிலிருந்து டிக்கெட் விலை தொடங்கும். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் கூட 15 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையாகும். ஆனால், தற்போதோ சென்னை - புவனேஷ்வருக்கான விமான டிக்கெட் விலை 10 மடங்கு அதிகரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதேபோன்று தில்லி மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.