states

953 வீடுகள் இடிப்பு இஸ்ரேல் அட்டூழியம்

பிரஸ்ஸல்ஸ், மார்ச் 31- 2022 ஆம் ஆண்டில் 953 பாலஸ்தீன மக்களின் வீடுகளை இஸ்ரேலிய ராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது என்று ஐரோப்பிய யூனியனின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான பல்வேறு பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் புதிய குடியிருப்புகளை அமைக்கும் சட்டவிரோத வேலையிலும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மேற்குக் கரைப்பகுதியில் அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்று கூறி பாலஸ்தீன மக்களின் வீடுகளை இடித்து வருகிறார்கள். தங்கள் நிலத்தை மீட்கும் போராட்டத்திற்கு அடையாளமாக பாலஸ்தீன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் தேதியன்று நில தினம் அனுசரித்து வருகின்றனர். ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இந்த தினத்தை அனுசரிக்கிறார்கள். 1976 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று போராட்டக்காரர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 953 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 101 கட்டிடங்கள் ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியால் கட்டப்பட்டவையாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, அகதிகளாக மாறியிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனின் இந்த அறிக்கை குறித்து இஸ்ரேல் கருத்து எதுவும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.