states

முன்னாள் அமைச்சர்களிடம் ரூ. 4.21 கோடி பறிமுதல்

மதுரை, ஜன.3-  தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 250 அரசு  அதிகாரிகள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 3 முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான 161 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.4.21கோடி  பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை  தடுக்கும் வகையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் முன்னாள் அமைச்சர்கள் வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்த நிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் விசாரணை அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் அதிகபட்சமாக தென் மண்டலத்தில் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 17 வழக்குகளும் திருச்சியில் 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறைந்தபட்சமாக வேலூரில்  ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 அக்டோபர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் 16 துறைகளில் நடத்திய சோதனையில் 1 கோடியே 12 லட்சத்து  57ஆயிரத்து 803ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது 2022ல் நடத்தப்பட்ட பெரிய அளவிலான சோதனை என்று கூறப்படுகிறது.

இதேபோன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2022 செப்டம்பர் 13 அன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான  13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ரூ.18 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டது, 2022 மார்ச் 15 மற்றும் செப்டம்பர் 13 ஆகிய தேதிகளில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 90 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  இதில் 1கோடியே 16லட்சம் ரூபாய் பறிமுதல் மற்றும் நகைகள் பறிமுதல், 2022 ஜனவரி 19ஆம் தேதி முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 2கோடியே 87லட்சத்து 98ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கம், 6.637 கி.கி. தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.  2022 ஆகஸ்ட் 12 அன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. பி. பாஸ்கருக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 14 லட்சத்து 96 ஆயிரத்து 900ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய 47 பேருக்கு சிறை  பொதுமக்களிடம் அரசு திட்டங்களை செயல்படுத்த லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், மின்வாரிய ஊழியர்கள்,வருவாய் ஆய்வாளர்கள், காவலர்களுக்கு என கடந்த 2022 இல் முந்தைய ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடையை  47 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.