சென்னை, மே 29- தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் திங்களன்று (மே 29) துவங்கியது. தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இள நிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8 இல் துவங்கி 22 வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 பேர் பதிவு செய்த னர். அதில் 2 லட்சத்து 44,104 மாண வர்கள் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனர். இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 29 முதல் மே 31 வரை நடை பெறுகிறது. பொதுப்பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடை பெற உள்ளது.