states

விவசாயிகள் தலைவர் மீது தாக்குதல் சமூக விரோதிகளை உடனே கைது செய்திடுக!

சென்னை,மே 23-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்தில் உள்ள லாலப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களாக தங்கள் ஊராட்சிக்கு அருகில் உள்ள முகந்தராயபுரம் ஊராட்சிக்கும், தங்களுடைய ஊராட்சிக்குமான எல்லைகளை வரையறை செய்திட வேண்டுமென்று போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி யும் பங்கேற்றுள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி முகந்தராயபுரம் ஊராட்சியின் ஆவணங்களை பார்வையிட சட்டப்படியான உத்தரவைப் பெற்றுள்ளார்.

22.5.2023 அன்று எல்.சி.மணி வாலாஜா ஊராட்சி ஒன்றிய உதவி ஆணையர் (ABDO) மற்றும் கிராம ஊராட்சி செயலர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட முகந்தராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்ட போது முகந்தராயபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.கே.முருகன் தூண்டுத லின்பேரில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சுரேஷ் தலைமையில் 15க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வந்து எல்.சி.மணியிடம்  ABDO  முன்பாகவே தகராறு செய்துள்ளனர்.  அங்கு ஒரு பதற்றமான சூழலை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தலைமையில் வந்த கும்பல் ஏற்படுத்தியது. இதனால் அங்கிருந்து எல்.சி. மணி தனது இருசக்கர வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் மேற்படி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரேஷ் தலைமை யிலான கும்பல் மணியை விரட்டிச் சென்று,  இருசக்கர வாகனத்தை மறித்து  அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். உடனடியாக அக்கம்பக்கம் இருந்த மக்கள் சென்று மணியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி யுள்ளனர். மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.  தன்னுடைய கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் பங்கெடுத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்திய ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் சுரேஷ், தாக்குதலுக்கு தூண்டிய ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.முருகன் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும்.