states

img

வேலை உறுதித் திட்டத்தை படுகொலை செய்யும் முயற்சி

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இன்று பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. மோடி ஆட்சியின் வேண்டுமென்றே செய்யப்படும் அலட்சியமும், முறைகேடான நடைமுறைகளும் இத்திட்டத்தை படுகொலை செய்து வருகின்றன.

வெறும் ஆறு மாதங்களில் 84.8 லட்சம் ஏழை உழைப்பாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். இது ஓர் எண்ணிக்கை மட்டு மல்ல; ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள் ளது. பெருந்தொற்றின் போது உயிர்நாடியாக இருந்த இத்திட்டத்தை இன்று தொழில்நுட்ப நுணுக்கங்களின் பெயரால் கொன்றொழிக்கிறது மோடி ஆட்சி.

ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற முறையை (ABPS) திணித்து, அதன் மூலம் தொழிலாளர்களை விரட்டியடிக்கும் தந்திரம் அரங்கேறுகிறது. கிராமப்புற வங்கிச் சேவைகள் முழுமையாக இல்லாத நிலையில், இணையதள இணைப்புகள் சரியாக இல்லாத சூழலில் இந்த டிஜிட்டல் கட்டாயம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.

தமிழ்நாட்டில் 14.7 சதவீதமும், சத்தீஸ் கரில் 14.6 சதவீதமும் தொழிலாளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். லிப்டெக் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிப்பதைப் போல 15 சதவீத நீக்கங்கள் முற்றிலும் முறைகேடானவை. முறையான விசாரணையின்றி, தொழிலாளர்களின் குறை களைக் கேட்காமல் மேற்கொள்ளப்படும் இந்த நீக்கம் ஜனநாயக விரோதமானது.

வேலை நாட்கள் 16.6 சதவீதம் குறைந்துள் ளன. பணவீக்கம் உச்சத்தில் இருக்கும் வேளை யில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் இந்த குறைப்பு பெரும் சமூக அவலத்தை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மக்கள் வேலை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு  கொள்கைகளின் விளைவு இது. பெரு முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கில் கோடிகள் தள்ளுபடி செய்யும் அரசு, ஏழை மக்களின் வாழ்வாதாரத் திட்டத்தில் மட்டும் சிக்கனம் காட்டுகிறது. உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் இந்த அணுகுமுறை மாற வேண்டும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். ஊதியத்தை உயர்த்த வேண்டும். டிஜிட்டல் கட்டாயத்தை கைவிட வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டுமெனில், இத்திட்டத்தை பலப்படுத்துவதே வழி. ஆனால் மோடி ஆட்சியோ இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. மக்கள் நலனை காக்க, இத்தகைய மக்கள் விரோத போக்குக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.