புதுதில்லி, மார்ச் 1- இந்து மதத்தின் மிக உயர்ந்த துறவி ஒருவர் (நித்தியானந்தா) இந்தியாவில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஐக்கிய நாடுகள் அவையில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான (CESR) குழுவின் 19-ஆவது கூட்டம் பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஐக்கிய கைலாசா நாடுகள் என்ற நாட்டின் பெயரில் அதன் பிரதிநிதி மா. விஜயப்ரியா நித்யானந்தா என்பவர் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்தப் பேச்சு அடங்கிய வீடியோவை ஐக்கிய நாடுகள் அவை தனது இணையதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அதில்தான், “ஐக்கிய கைலாசா நாட்டை நிறுவிய நித்யானந்தா இந்து மதத்தின் உச்சபட்ச துறவி” என்றும் “பிறந்த நாடான இந்தியாவில் அவர் துன்புறுத்தலுக்கு ஆளானார்” என்றும் மா. விஜயப்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஐக்கிய கைலாசா” என்ற பெயரில் நித்தியானந்தா தனி நாட்டை உருவாக்கியது உண்மைதானா? அந்த நாட்டை ஐக்கிய நாடுகள் அவை எப்போது அங்கீகரித்தது? என்ற சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. எனினும், கைலாசாவின் தலைவர் (நித்தியானந்தா) இந்தியாவில் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருப்பது குறித்து இந்திய அரசோ அல்லது அதன் வெளியுறவுத் துறையோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வந்த நித்தியானந்தா, பெண்களை கடத்துதல், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தலைமறைவான அவர், தற்போது தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை தனிநாடாக அறிவித்து ஆட்சி செய்து வருவதாக அவ்வப்போது சமூகவலைதளங்களில் நித்தியானந்தாவே புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில், கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் அவைக்கே நித்தியானந்தா ஆள் அனுப்பி வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.