புதுக்கோட்டை, ஜன.19 - திருமயம் அருகே முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர், தொடர்ந்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு வந்ததால் அவரை லாரி ஏற்றிக் கொன்ற தாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகுபர்அலி (58). இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு, வெங்களூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது லாரி மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மரியம் திரு மயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “எனது கணவர் ஜகுபர் அலி, இந்தப் பகுதிகளில் நடைபெறும் கல்குவாரி முறைகேடுகள் குறித்து தொடர்ச்சியாக அரசு அலுவலர்களிடம் புகார் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்றவற்றை செய்து வந்தார். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எங்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு திரும்பிய அவர் மீது லாரி மோதி இறப்பு ஏற்பட்டுள்ளது. ஜகுபர்அலியின் சகோதரர் ராஜாமுகமது மற்றும் அயூப்கான் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர். துளையானூர் வளை யன்வயலைச் சேர்ந்த குவாரி நிறு வனத்தினர் மீது சந்தேகம் உள்ளது. எனவே, முறையாக விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் இரா.சா.முகிலன், சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பா ளர் ந.சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தொடர்ச்சியாக கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த ஜகுபர்அலி, கடந்த ஜனவரி 10 அன்று கூட கோட்டாட்சியர் அலுவலகம் சென்று சட்ட விரோத குவாரி குறித்து புகார் அளித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் மீது லாரி ஏறிய விபத்தில், அவர் உடல் தூக்கி எறியப்பட்டுள்ள தூரம், விபத்து நடந்துள்ள விதம் ஆகியவை சந்தேகங்களை ஏற்படுத்து கின்றன. படுகொலை செய்யப்பட்டிருக்க லாம் என சந்தேகிக்கிறோம். இந்த வழக்கை வெறுமனே விபத்து வழக்காக முடித்துவிடாமல், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.