states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஈரானில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்நாட்டு மனித உரிமைகள் குழு தகவல் தெரிவித்துள்ளது. தூக்கி லிடப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அரசு நடப்பாண்டில் மட்டும் இதுவரை 194 பேரை தூக்கிலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெறுப்பு, வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும்  “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக மாநிலத்தில்  வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற வில்லை என ஒன்றிய அரசும், மணிப்பூர் அரசும்  உச்சநீதிமன்றத்தில் பதிலறிக்கை தாக்கல் செய்துள்ளன.

ஒரு கிலோவுக்கு ரூ.50-க்கும் குறைவான அல்லது அதற்கு சமமான விலையுள்ள ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை தடை செய்து ஒன்றிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ஆசிரியர் ஒருவரிடம் இணையத்தில் பிஎப் ஊழியர் போல நடித்து, ரூ.80,000 மோசடி செய்தது ஹேக்கர் குழு.

2016 முதல் 2020 வரை 4 ஆண்டுகளில் 40,000 -க்கும் மேற்பட்ட பெண்கள் குஜராத்தில் “சௌகி தாரின் (பிரதமர் மோடி)” கண்காணிப்பில்  இருந்தும்  காணாமல் போயுள்ளனர் என குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி விமர்சித்துள்ளார்.

டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை 2027ஆம் ஆண்டிற்குள் தடை செய்ய வேண்டும் எனவும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் என ஒன்றிய எண்ணெய் அமைச்சக குழு, ஒன்றிய அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது சென்னையைச் சேர்ந்த  அருண், சிவராம் என்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதே போல தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளித்த போது அருண் பல்தேவ் (19) என்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உலகச் செய்திகள்

உஸ்பெகிஸ்தானின் புதிய ஜனாதிபதித் தேர்தலை உடனடி யாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 30 ஆம்  தேதி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மக்கள் முன்பாக வைக்கப்பட்டது. அதில் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டுமுறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்பதில் தளர்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவு இருந்ததால் தற்போதைய ஜனாதிபதி ஷாவ்கட் மீர்சியோயேவ் மேலும் இரண்டு முறை போட்டியிட வழி கிடைத்திருக்கிறது.

நேபாளத்தின் பஜாங் மாவட்டத்தில் சாய்பால் பகுதியில் உள்ள மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் குவிண்டால் அரிசி இந்தப் பகுதியின் மக்களுக்குத் தேவையானதாக உள்ளது. 2 ஆயிரத்து 800 குவிண்டால் அரிசிக்கு மட்டும்தான் அரசு மானியம் வழங்கு கிறது. இருப்பினும், ஒப்பந்ததாரரோ ஆண்டுக்கு 1,750 குவிண்டால் அரிசியை மட்டுமே விநியோகிக்கிறார். 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் நகரவைத் தலைவர் தெரிவிக்கிறார்.

ஜனவரி மாதத்தில் மூன்றாவது முறையாக பிரேசில் ஜனாதிபதியாக லூலா டி சில்வா பொறுப்பேற்ற பிறகு, பிற நாடு களுடனான உறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். குறிப்பாக தென் அமெரிக்க நாடுகள் ஒரே குரலில் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தங்கள் தலைநகர் பிரேசிலியாவில் மே 30 ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து தென் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகளும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.