states

அரசின் ஏவுதளத்திலிருந்து பாய்ந்த ‘தனியார் ராக்கெட்’

ஸ்ரீஹரிகோட்டா, நவ.18- இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ 3 செயற்கைக்கோள்களுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமையன்று  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம்) அமைப்பு ஹைதராபாத்தைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்திருந்தது.ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது.  2018-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பவன் குமார் சந்தனா மற்றும் நாக பாரத் டக்கா ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தெலுங்கானா மாநிலம் கோண்டாபூரில் அமைந்துள்ளது.

தலைமையகம் ஹைதராபத்தில் உள்ளது. இந்த நிறுவனம் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளது.    ‘பிராரம்ப்’ என்ற பெயரிலான திட்டத்தின் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ‘ஸ்கைரூட்’ ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய மூன்று விதமான செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மூன்று செயற்கைக்கோள்கள் சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் ஸ்பேஸ் கிட்ஸ், ஆந்திராவை தளமாகக் கொண்ட என்-ஸ்பேஸ்டெக் மற்றும் ஆர்மேனியன் பாஸூம்க்யூ ஸ்பேஸ் ரிசர்ச் லேப் ஆகியவற்றிலிருந்து வந்தவையாகும்.  இந்த 3 செயற்கைக்கோள்களுடன் ‘விக்ரம் எஸ்’ ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.  இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் குழு வடிவமைத்த மூன்று ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சோ்த்து அனுப்பப்பட்டுள்ளன. அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.