சென்னை,அக்.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்பட்டுவரும் கர்நாடக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் பாராமுகமான வஞ்சகப் போக்கிற்கு எதிராகவும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்திருந்த பந்த் போராட்டம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுத்து, உடன் நின்ற பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இதே பிரச்சனையில் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனை பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று ஆதரித்துள்ளன. தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மதிப்பளித்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.