திருவனந்தபுரம், அக்.24 - தமிழ்நாட்டின், வாச்சாத்தி கிராமத்தில் ஏழை மலைவாழ் மக்களை பொய்யான குற்றச்சாட்டின்பேரில் கொடூரமாக தாக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியை நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனொரு பகுதியாக, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மானவியம் வீதியில் நடைபெற்ற வாச்சாத்தி வெற்றி விழாவை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் கே.கே.சைலஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார். வெற்றிக் கொண்டாட்டமாக வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் எஸ்.கே.பிரீஜா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எம்.விஜயகுமார், மாவட்டத் தலைவர் வி.எஸ்.பத்மகுமார், செயலர் கே.சி.விக்ரமன், மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் எம்.ஜி.மீனாம்பிகா, மாயாதேவி ஆகியோர் பேசினர். இதுபோல் வர்க்கலா, ஆற்றிங்கல், கிளிமானூர், மங்கலபுரம், வெஞ்ஞாரமூடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாச்சாத்தி வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.