திருவனந்தபுரம், ஜன. 1- சபரிமலை விமான நிலையத்திற்காக காஞ்சிரப்பள்ளி தாலுகாவில் உள்ள எருமேலி தெற்கு மற்றும் மணிமலா கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அரசு உத்தர விட்டுள்ளது. இதற்காக 2570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். செருவல்லி எஸ்டேட் நிலம் 2263 ஏக்கர் தவிர, மேலும் 307 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். சமூக தாக்க ஆய்வுக்கு நிபுணர் குழு நியமிக்கப்படும். ஜூன் 2020 இல், திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு வகிக்கும் கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கேஎஸ்ஐடிசி), சபரிமலை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை கட்டமைப்ப தற்கான அனுமதி விண்ணப்பத்தை சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் விரிவான ஆய்வு நடத்தினார். ஜூன் 2022 இல், திட்ட ஆலோசகரான அமெரிக்க நிறுவனமான லூயிஸ் பர்கர் சர்வீசஸ் தயாரித்த தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆய்வு அறிக்கையை கேஎஸ்ஐடிசி சமர்ப்பித்தது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஆகியோ ருக்கு அறிக்கை நகல் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 11, 2022 அன்று கூடிய விமான நிலையங்கள் தொடர்பான வழிநடத்தல் குழு, நிலம் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் புதிய திட்டம், திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து விளக்கம் கேட்டது. டிசம்பர் 12 அன்ற கேஎஸ்ஐடிசி அளித்த விரிவான பதிலின் தொடர்ச்சியே சமூக தாக்க ஆய்வு ஆகும். மாநில பட்ஜெட்டில், விமான நிலையத் திட்டத்தின் முதற்கட்டத் தேவைகளுக்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சபரிமலை செல்லும் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும், சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த விமான நிலையம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் புனித யாத்திரை சுற்றுலா திட்டத்துடன் இணைக்க உதவும் என சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.