திருவனந்தபுரம் தீவிர வறுமை ஒழிப்பு, தரமான நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் குப்பையில்லா புது கேரளத்தை முழுமையாக செயல்படுத்த அரசியல் உறுதியும் மக்கள் பங்கேற்பும் அவசியம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், மத அமைப்புகளும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்றார். திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் வெகுமக்கள் அமைப்புகளும் முழுமையான ஈடுபாட்டுடன் இதுகுறித்த பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
தீவிர வறுமையை ஒழிக்க நுண் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் ஏழைகளுக்கு ஆதரவாக பராமரிப்பு நிதியின் (Care Fund) வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்பட்டன. மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அவர்களின் துயரத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். குடும்பங்களுக்கு நிலையான வருமான ஆதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். நோய்த்தடுப்பு சிகிச்சையானது கிராமப்புற அல்லது நகர்ப்புற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தேவைப்படும் அனைவருக்கும் சிறந்த பராமரிப்பை உறுதி செய்வதற்கான ஒரு அடிமட்ட இயக்கமாக இருக்கும் என்று கூறினார்.
குப்பை மேலாண்மையை அறிவியல் பூர்வமாக கையாள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், இந்த பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிப்பதாகவும், திட்டத்திற்கு ஒத்துழைக்க அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர்கள் எம்.பி.ராஜேஷ், ராமச்சந்திரன் கடனப்பள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், பழகுளம் மது, எம்எல்ஏக்கள் இ.சந்திரசேகரன், எம்.கே.முனீர், ஸ்டீபன் ஜார்ஜ், மோன்ஸ் ஜோசப், தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.