திருவனந்தபுரம், செப். 7 - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை, ஒன்றிய பாஜக அரசு வேண்டுமென்றே பாரபட்சத்துடன் நடத்தி வருகிறது. குறிப்பாக, நிதி ஒதுக்கீடு, வரிப் பகிர்வில் கடுமையாக வஞ்சித்து வருகிறது
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநி லங்கள், தங்களுக்கு முறைப்படி வந்துசேர வேண்டிய வரிப் பங்கீடு, நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கே போராட வேண்டி யுள்ளது. கேரள அரசு தங்களுக்கு வர வேண்டிய நிதியை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலமே பெற்றது.
தற்போது, 16-ஆவது நிதிக் குழு அமைக்கப்பட்டுள்ள பின்னணியில் இதிலும் ஒன்றிய அரசு என்ன செய்யக் காத்திருக்கிறதோ, என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பிரச்சனை, வரிப் பகிர்வு ஆகியவற்றி லுள்ள சிக்கல்கள் தொடர்பாக செப்டம்பர் 12 அன்று திருவனந்தபுரத்தில் நிதி யமைச்சர்கள் மாநாட்டை கேரள மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
“கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்கும் இந்த மாநாட்டில், தெலுங்கானா துணை முதல்வ ரும் நிதியமைச்சருமான மல்லு பாட்டி விக்ரமார்கா, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஐந்து மாநிலங்களின் நிதிச் செயலாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசனும் மாநாட்டில் பங்கேற்பார்” என எதிர்பார்ப்பதாக கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும், “இம்மாநாட்டில் நடைபெறும் பல்வேறு அமர்வுகளில் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், கேரள மாநில திட்டக் குழுமத் துணைத் தலைவர் வி.கே. ராமச்சந்திரன், கேரள மாநில முன்னாள் நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக், முன்னாள் ஒன்றிய அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திர சேகரன், பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்” என்றும் கே.என். பாலகோபால் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் பொதுச்செலவினத்தில் 62.4 சதவிகிதம் மாநிலங்களுக்கானது. ஆனால் மொத்த வருவாயில் 37.3 சதவிகிதம் மட்டுமே தற்போது கிடைக்கி றது. 63 சதவிகித நிதியை ஒன்றிய அரசே வைத்துக் கொள்கிறது.
குறிப்பாக மத்திய வருவாயில் 41 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரை முழுமையாக செயல் படுத்தப்படவில்லை. இதனால், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஒவ்வொரு மாநிலமும் சந்திக்கும் நிதி சார்ந்த பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றில் ஒரு ஒருங்கிணைந்த முடிவுக்கு வருவது; மாநாட்டில் எடுக்கப்படும் முடிவை நிதி ஆயோக்கிடம் சமர்ப்பிப்பது மாநாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்” என்றும் கே.என். பாலகோபால் தெரிவித்துள்ளார்.