கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து, மலப்புரம் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், நாளை (ஜூன் 23) கோழிக்கோடு மற்றும் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கையின் போது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பதிவாகும்.
மேலும், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு,கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.