திருவனந்தபுரம், ஜுன் 12- கேரள சட்டப்பேரவையில் உள்ள ஆர்.சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் ஜுன் 13 வியாழன் முதல் சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் உலக கேரளா சபைக்கூட்டம் நடைபெறுகிறது. 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 351 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
முதல்வர் பினராயி விஜயன், வியாழன் காலை 10.30 மணிக்கு உலக கேரள சபையின் இணைய தளத்தை தொடங்கி வைத்து கேரளத்தில் இருந்து புலம்பெயர்ந்தோர் கணக்கெடுப்பை (2023) வெளியிடுகிறார். மாலை 5 மணிக்கு நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் பொதுமாநாடு நடைபெறுகிறது. சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் வெள்ளியன்று காலை 10 மணிக்கு உலக கேரள சபாவை முதல்வர் தொடங்கி வைக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் பேசவுள்ளார்.
அற்ப காரணம் கூறி ஆளுநர் புறக்கணிப்பு
கடந்த உலக கேரளா சபையை துவக்கி வைத்த ஆளுநர் ஆரிப் முகமது கான், சமீப காலமாக தனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை மறைப்பதற்காக, தற்போது உலக கேரள சபையை புறக்கணித்துள்ளார். வன்முறை ஆதரவாளர்களின் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கல்வித் துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியதையே ஆளுநர் வன்முறை என்கிறார். மாணவர்களுக்கு ஆதரவாக முதல்வர் பேசியதையே வன்முறையாளர்களின் ஆதரவாளர்கள் என விமர்சனம் செய்துள்ளார்.