கொச்சி, மே 6
இந்தியப் பெருங்கடல் நிரந்தரமாக வெப்பமடைந்து வருவதாக ஆய்வு கூறுகிறது. கடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாட்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 250 ஆக அதிகரிக்கலாம்.
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ராக்ஸி மேத்யூ கோல் தலைமை யிலான ஆய்வு, ஒட்டுமொத்த கடல் சூழலையும் எதிர்மறை யாகப் பாதிக்கும் இந்த நிகழ்வால், அரபிக்கடலில் மீன் வளம் 8 முதல் 10 சதவிகிதம் வரை குறையும் என்று கூறுகிறது.
வெப்ப நாட்கள் அதிகரிப்பு
முன்னதாக, கடலின் வெப்பம் வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே அதிகமாக இருந்தது. 2100 ஆம் ஆண்டளவில், இது 220 முதல் 250 நாட்களாக அதிகரிக்கும். இந்தியப் பெருங்கடல், இந்தியா உட்பட 40 நாடுகளின் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வசிக்கும் இப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் பெரும் சமூக மற்றும் பொருளாதார விளைவு களை ஏற்படுத்தும்.
அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகபட்சமாக உயர வாய்ப்புள்ளது. 1980 மற்றும் 2020-க்கு இடையில், இந்தியப் பெருங்கட லில் வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி வரை இருந்தது. ஆனால் 2021க்கு பிறகு 28.5இல் இருந்து 30.7 டிகிரியாக வெப்பநிலை உயர்ந்தது. அதிகரித்து வரும் வெப்பநிலை மீன்வளத்தையும் அழித்து வருவதாக சிஎம்எப்ஆர்ஐ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மத்தி, கானாங்கெளுத்தி, இறால் மற்றும் கோரா போன்ற பிரபலமான மீன்கள் கிடைப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. 2023இல் மீன் கிடைப்பது உச்சத்தை எட்டியது. ஆனால், தற்போதைய சீதோஷ்ண நிலையில் சராசரி மீன்கள் கிடைப்பது குறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.