states

img

கேரளாவில் மாற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த மகள் - தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

கேரளாவில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த கிறிஸ்தவ பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செளதி அரேபியாவில் செவிலியராக பணிபுரிந்து வரும் ஜியோட்ஸ்னா மேரி ஜோசஃப், கேரளாவில் டி.ஒய்.எஃப்.ஐ (DYFI) அமைப்பின் நிர்வாகியான ஷெஜினை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள் இத்திருமணத்தை "லவ் ஜிகாத்" என குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.

வெவ்வேறு மதங்களை சேர்ந்த குறிப்பாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வதை பாஜகவினர் "லவ் ஜிகாத்" எனக்கூறி வருகின்றனர்.

எனினும், DYFI அமைப்பு இத்தகையை மாற்று மத திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜியோட்ஸ்னா தந்தை, தன் மகள் சட்டத்திற்கு புறம்பாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதிகள் வி.ஜி.அருண் மற்றும் சி.எஸ்.சுதா ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, தான் சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைக்கப்படவில்லை எனவும், தன்னுடைய திருமண முடிவு தன் விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றதாகவும் ஜியோட்ஸ்னா தெரிவித்தார்.

இதையடுத்து, ஜியோட்ஸ்னாவின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.