states

img

பெண்கள் முன்னேற்றத்துக்கு 25 சதவிகிதம் நிதி பாலின சமத்துவ பட்ஜெட் அமல்படுத்தும் கேரளம்

திருவனந்தபுரம் (மல்லு சுவராஜ்யம்  நகர்), ஜன.10- கேரளம் பின்பற்றும் மாற்றை மதிப்பிடுகையில் திட்டச் செலவுகளில் 25 சதவிகிதம் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மாநிலத்தில் ‘பாலின சமத்துவ பட்ஜெட்’ அமல்படுத்துவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது: கடந்த ஆறரை ஆண்டுகளில் சந்தை தலையீடுகளுக்காக மட்டும் 9,800 கோடி ரூபாய் கேரள அரசு செலவிட்டுள்ளது. இதுபோன்ற தலையீடுகளின் விளைவாக விலையேற்றம் குறைவான மாநிலமாக கேரளம் உள்ளது. நலத்திட்டங்கள் என்பது மக்களின் உரிமை. யாரோ ஒருவர் இலவசமாகக் கொடுப்பதல்ல. கேரளம் நாட்டிலேயே அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநிலமாகும். நல ஓய்வூதியமாக மாதந் தோறும் ரூ.1600 வீதம் 57 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. கோவிட் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.300 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. நல வாரியங்கள் மூலம் முதல் கட்டமாக 28 லட்சம் தொழிலாளர்களுக்கு 323 கோடி ரூபாய். இரண்டாம் கட்டமாக 27 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 266 கோடி ரூபாய்  வழங்கப்பட்டது. கடும் வறுமையை எதிர்கொள்ளும் 64 ஆயிரம் குடும்பங்களை கண்டறியப்பட்டு அதி லிருந்து அவர்களை விடுவிக்கும் நடவடிக்கை களை அரசு துவக்கியுள்ளது. லைப் மிஷன் திட்டத்தில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் புதிதாக கட்டப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 2016 முதல் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

கேரளத்தில் மட்டுமே நகர்புற ஏழைகளுக்கு உதவும் அய்யன்காளி வேலை உறுதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் 2021-2022 இல் 46 லட்சம் வேலை நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. 59 தொழில் துறைகளில் உயர்ந்த சம்பளம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக தினக்கூலி கிடைக்கும் மாநிலமாக கேரளம் அறி விக்கப்பட்டது. முதலீடுகள் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. ஒரு லட்சம் தொழில்கள் தொடங்குவதற்கான ஓராண்டு திட்ட  நடவடிக்கைகள் மேற்கொண்டபோது 8 மாதங்களில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. 1,17,840 தொழில் நிறுவனங்களாக அது அதி கரித்துள்ளது. 2,50,000 வேலை வாய்ப்புகள் இதன் மூலம் கிடைத்துள்ளன. இருதினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு இதனை ‘சிறந்த நடவடிக்கை யாக’ (பெஸ்ட் பிராக்டீஸ்) அவர்களது தேசிய மாநாட்டில் புகழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நியமனங்களை தேர்வாணையம் (கேபிஎஸ்சி) நடத்தியுள்ளது. 30,000 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடிந்துள் ளது. ஒன்றிய அரசு பொதுத்துறைகளை விற்கிறது. கேரளத்தில் அவற்றை மாநில அரசு கையகப்படுத்துகிறது. அதன் ஒரு  பகுதியாக காசர்கோடு கெல்-இஎம்எல் இப்போது  செயல்பட்டு வருகிறது. அதுபோலவே கோட்ட யத்தில் கேபிபிஎல் செயல்பட்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக நல்ல நிலையில் நடத்த முடிந்துள் ளது. கேரளம் பின்பற்றும் மாற்றை மதிப்பீடு செய்தால் திட்டச் செலவுகளில் 25 சதவிகிதம் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் செயல்படுத்தப்படுவது பாலின  சமத்துவ பட்ஜெட்டாகும். பெண்களின் பாது காப்பை உறுதிப்படுத்த ஷி டாக்சி, ஷி லாட்ஜ், பிங்க்  போலீஸ் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு ஜிடிபியில் ஒரு சதவிகிதம்கூட பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யவில்லை. 0.1 சதவிகிதம் மட்டுமே குழந்தைகள்-பெண்களுக்கென ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளத்தில் ஊரக வேலை உறுதி  திட்டம், தேசிய சமூக நீதி இயக்கம் போன்றவற்றை சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், மகளிர் என சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2021-22 க்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு 3.2 சதவிகிதத்தில் இருந்து 2.5 சதவிகிதமாக பட்ஜெட்டில் வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நல்ல உணவு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றை கேரளத்தில் செயல்படுத்தப்படும் மாற்றுக் கொள்கை மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதோடு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கேரளம் மேம்படுத்தப்படுகிறது. அடுத்த 25 முதல் 50 வருடங்களுக்கு தேவையான கண்ணோட்டத்துடன் புதிய கேரளமாக முன்னேறி வருகிறது. அதற்கான உற்பத்தியும், விநியோக பொறுப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி உறுதி செய்யப்பட்டு புதிய கேரளம் படைக்க அனைவரும் கரம் கோர்க்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

செய்தி: திருவனந்தபுரத்தில் இருந்து சி.முருகேசன். படங்கள்: ஜே.ஜெசின்,  ஜி.பிரமோத் தேசாபிமானி