states

‘பில்கிஸ் பானு’ குற்றவாளிகளை ஆதரித்த பாஜக எம்எல்ஏ-வுக்கு மீண்டும் சீட்!

அகமதாபாத், நவ. 13 - குஜராத் மாநிலம், கோத்ரா தொகுதி பாஜக வேட்பாளாராக சந்திரசிங் ரவுல்ஜி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் மதவன்முறையின்போது, முஸ்லிம் இளம்பெண்ணும் - கர்ப்பிணியுமான பில்கிஸ் பானு, கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்த 11 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த நிலையில், அவர்களை கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று குஜராத் பாஜக அரசு விடுதலை செய்தது. 11 குற்றவாளி களுக்கும் சிறைவாயிலில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர்கள் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்கள் என்று கேள்விகள் எழுந்தன. அப்போது, கோத்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ சந்திரசிங் ரவுல்ஜி பேசுகையில், “அவர்கள் (விடுதலையானவர்கள்) பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல கலாச்சா ரம் கொண்டவர்கள் என்று அறியப்பட்ட வர்கள். அவர்களை தண்டிப்பது யாரோ  ஒருவரின் தவறான நோக்கமாக இருந்திருக்கலாம். மேலும் அவர்கள் சிறை யில் நல்ல பண்புடன் செயல்பட்டார்கள்; அதன்காரணமாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்” என்று பதிலளித்து அதிர்ச்சி அளித்தார். இதற்காக ரவுல்ஜி-க்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், அவர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், பாஜக தலைமை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக, அவருக்கு கோத்ரா தொகுதியில் மீண்டும் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது. சந்திரசிங் ரவுல்ஜி கோத்ரா தொகுதியில் 6 முறை எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.