குஜராத்தில் பில்கிஸ்பானு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் நன்னடத்தையை காரணம் காட்டி முன் கூட்டியே விடுதலை செய்தது குறித்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து சிறுபான்மையினரை குறிவைத்து வன்முறை நடத்தப்பட்டது. இதில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அவரின் 3வயது குழந்தை அவரது முன்னே தரையில் அடித்து கொலை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கடந்த 2008ம் ஆண்டும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் 11 பேரும் மாநில அரசின் ஒப்புதலுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டனை காலம் முடியும் முன் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ்பானு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று பில்கிஸ்பானுவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.