கர்நாடகா முதல்வராக சித்தராமையும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இன்று பதவியேற்றனர்.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்றது. இதை அடுத்து, முதல்வர் பதவிக்கு மாநில காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில், அம்மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.
அவரைத் தொடர்ந்து, ஜி. பரமேஸ்வரா, கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, ராமலிங்கா ரெட்டி, பிரியங்க் கார்கே, சமீர் அகமது கான் ஆகிய 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். கர்நாடக ஆளுநர் தவார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.