போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி தாய் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்த, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் சிறுமியின் தாய் கடந்த மே 26-ஆம் தேதி புற்றுநோயால் உயிரிழந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஜூன் 12-ஆம் தேதி ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி எடியூரப்பா தில்லி புறப்பட்டு சென்றார். மேலும், ஜூன் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் எனச் சிறுமியின் சகோதரர் தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.