states

img

ஒடிசா: அரசு விடுதிகளில் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் 26 பேர் உயிரிழப்பு!

ஒடிசா மாநிலத்தில், கடந்த 8 மாதங்களில் அரசு விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அமைச்சர் நித்யானந்த கோண்ட் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒடிசா சட்டமன்றத்தில் பிஜேடி கட்சியின் மூத்த உறுப்பினர் ரணேந்திர பிரதாப் ஸ்வைன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அம்மாநில பழங்குடியினர் மற்றும் பட்டியலிடப்பட்டோர் மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட், கடந்த 8 மாதங்களில் அரசு விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவர்களில் 6 பேர் விடுதிகளில் தற்கொலை செய்து கொண்டதாகவும், மீதமுள்ள 20 பேர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களில் உயிரிழப்பு 14 மாவட்டங்களில் நடந்துள்ளது. அதிகபட்சமாக ராயகடா மாவட்டத்தில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் கோராபுட் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் தலா மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன; சுந்தர்கர் மற்றும் பர்கர் மாவட்டங்களில் இந்தக் காலகட்டத்தில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன; மேலும், போலங்கிர், கஞ்சம், ஜார்சுகுடா, கந்தமால், கியோஞ்சர், மயூர்பஞ்ச், நயாகர், நுவாபாடா மற்றும் சுபர்ணாபூர் மாவட்டங்களில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்டி & எஸ்சி மேம்பாட்டுத் துறையின் கீழ் மொத்தம் 1,762 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, இதில் சுமார் 90 சதவீத மாணவர்கள் பழங்குடி சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.