states

img

பிரதமர் மோடி பஞ்சாப் வந்தால் போராட்டம் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவிப்பு

பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தெரிவித்துள்ளது.

வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரபிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற அமைதி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்து, கலவரத்திற்கு காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு அலகாபாத் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தெரிவித்துள்ளது. ஏற்கனவே, விவசாயிகள் போராட்டத்தில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பஞ்சாப் விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில்,பிப்ரவரி 20 ஆம் தேதி, பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள், அந்த மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம், பதன்கோட் பகுதிக்கு பிப்.16யிலும், அபோஹர் பகுதியில் பிப்.18 ஆம் தேதியன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி வருகை தரும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தரும் ஒன்றிய அமைச்சர்கள், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கும் கறுப்புக்கொடி காட்டப்படும்போது சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.