புதுச்சேரி, மார்ச் 8- விவசாய தொழிலாளர் நல சங்கத்தை செயல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச கோரிக்கை மாநாடு பிரதேச தலைவர் மணிபாலன் தலைமையில் வில்லியனூரில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். செயலாளர் உலகநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
நிர்வாகிகள்
புதுச்சேரி பிரதேச தலைவராக ஏ.வின்சென்ட், செயலாளராக த.தமிழ்ச்செல்வன், பொருளாளராக எம்.தட்சிணாமூர்த்தி, துணை தலைவர்களாக இன்னரசு, பால்ராஜ், துணை செயலாளர்களாக விநாயகம், ஹரிதாஸ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட பிரதேச குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தை புதுச்சேரியில் முழுமையாக செயல்படுத்த வேண்டும், 100 வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், நகர்ப்புறத்திலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் நல சங்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு மண்வெட்டி, கடப்பாரை போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.