கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழ்ந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டத்தின்போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி வி.காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? இது போன்ற துயர சம்பவங்களை எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது? இதுபோன்ற சம்பவம் நடந்தால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போதிய வாகனங்கள் உள்ளதா, காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்?” என அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி அம்மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இவ்வழக்கு மீண்டும் 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.