அரியானா மாநிலம் கர்னலில் 3 மாடி அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; இதில், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தின் தரோரி கிராமத்தில் `சிவ் சக்தி' என்ற அரிசி ஆலை இயங்கிவந்தது. அரிசி ஆலையின் இரண்டாவது தளத்தில் ஊழியர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை மூன்று மணியளவில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும், அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.