states

img

பீகார்: 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம், தாதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் முற்றிலுமாக வீடுகள் எரிந்து சாம்பலானது.

பீகார் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் ஒரு தரப்பினர் குடிசைகள் அமைத்து வசித்து வருவதாகவும். அந்த நிலத்திற்கு மற்றொரு தரப்பினர் சொந்தம் கொண்டாடுவதாகவும், இந்த விவகாரத்தில் தான் சிலா் இரவு நேரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்துள்ளது. அதோடு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தீயில் சிக்கி பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மகாதலித் காலனியில் நடந்த அட்டூழியங்கள், நிதிஷ்குமார் - பா.ஜ.க கூட்டணி அரசின் காட்டு ராஜ்ஜியத்திற்கு மற்றொரு சான்றாகும்.

ஒரே இரவில் ஏழை மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளது. அதிகார பேராசையில் அக்கறையின்றி இருக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்” என குறிப்பிட்டுள்ளார்.