states

ரூ. 200 கொடுத்து ஏமாற்றி விட்டதாக மக்கள் போராட்டம் ரூ. 500 தருவதாக ஆசைகாட்டி மோடி கூட்டத்திற்கு ஆள்சேர்த்த பாஜகவினர்

பெங்களூரு, நவ. 14 - மோடி கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு 500 ரூபாய் தருவதாக அழைத்துச் சென்று, கடைசியில் 200 ரூபாய் கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூலித்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம் சித்லுகட்டா தாலுகாவில் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் கட்டட வேலை செய்து வருகின்றனர்.  அண்மையில் பிரதமர் மோடி பெங்களூரு வந்தபோது, கூட்டம் சேர்ப்பதற்காக, இந்த கூலித்தொழிலாளிகளை தலா ரூ. 500 பணம் கொடுப்பதாக கூறி, பாஜக நிர்வாகிகள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கூட்டத்தின் முடிவில் ரூ. 200 மட்டுமே கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்ல மதிய உணவும் கூட ஏற்பாடு செய்யாமல் இரவு வரை பட்டினி போட்டு வதைத்துள்ளனர்.

இதனால், ஆவேசமடைந்த கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கு சேர வேண்டிய மீதிப் பணத்தை பாஜக-வினரிடமிருந்து பெற்றுத்தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்து விட்டு, அங்கேயே போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.  “கூலி கொடு... கூலி கொடு... தொழிலாளிகளை ஏமாற்றாதே..!” என முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். கூலித் தொழிலாளர்களின் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகிகளை வரவழைத்த காவல்துறையினர், தொழிலாளர்களை சமாதானப்படுத்துமாறு கூறியுள்ளனர்.  இதையடுத்து, பாஜக நிர்வாகிகள், தொழிலாளர்களை அழைத்துச் சென்று சமாதானம் செய்துள்ளனர். அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-2 மற்றும் விமான நிலையம் அருகே 108 அடி உயர கெம்பேகவுடா சிலை ஆகியவற்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று  (நவம்பர் 11) பெங்களூரு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.