புதுதில்லி, மார்ச் 15 - தேசிய தடுப்பூசி தினமான புதனன்று (மார்ச் 16) நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இந்தப் பிரிவினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்- இ நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஆன்லைன் பதிவு மூலமோ அல்லது நேரில் சென்றோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் இதனை தெரிவித்தார். 12 வயதுக்கு மேற்பட்ட, 14 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு (2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள்) இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவர். அவர்களுக்கும் புதன்கிழமை முதல் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு 36 வாரங்கள் ஆனவர்களுக்கு இது போடப்படுகிறது. 14 முதல் 18 வயது பிரிவினருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.