states

img

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு எதிராக போராட்டங்கள் எழ வேண்டும்

கோடியேரி பாலகிருஷ்ணன் நகர்/திருச்சூர், டிச.16- விவசாயிகள்-தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்துடன், இந்துத்துவா கார்ப்பரேட் கூட்டணியையும் சங்பரிவாரத்தின் அரசியல் அணுகுமுறையையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக, திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில், ‘விவசாய நெருக்கடி, விவசாயிகள் போராட்டம் மற்றும் மாற்றுக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கை வியாழனன்று (டிச.15) துவக்கி வைத்து பிரகாஷ் காரத் பேசினார்.  அப்போது அவர், இடது ஜனநாயக மாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வரலாற்றில் முதல் முறையாக ஒன்றிய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ள சூழலில், எதிர்கால நடவடிக்கை மற்றும் மாற்றுப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

முப்பது ஆண்டுகளாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளமயக் கொள்கை அணுகுமுறைகளின் ஒரு பகுதியாக கடுமையான விவசாய நெருக்கடி எழுந்தது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களின் ஆபத்தை உணர்ந்து விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து விவசாயச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் விவசாய நெருக்கடி கடுமையாக உள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களை ஏகபோகங்களுக்கு மாற்றுவது பரவலாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் அமலில் இருந்து வந்த நிலச் சீர்திருத்தச் சட்டங்களை ஒழித்து ஏகபோக நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களும், விவசாயிகளின் விளைபொருட்களும் குறைந்த விலைக்குக் விற்கப்படுகின்றன. விவசாயத் துறையில் உள்ள ஒற்றுமை அரசியல் கட்சிகளிடமும் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயி - தொழிலாளர் - அரசியல் கட்சி முன்னணியாக கூட்டுப் போராட்டம் எழ வேண்டும். மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவது விவசாயத் துறையில் நெருக்கடியை அதிகரிக்கும். இதற்கு எதிரான போராட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் அவசியம் என்பதை உணர்ந்து போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார் பிரகாஷ் காரத்.

ஏ.விஜயராகவன்

கருத்தரங்கில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் பேசியதாவது: நமது நாட்டில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டவர் இஎம்எஸ். நம்பூதிரிபாட். அதுகுறித்து அவர் நடத்திய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் வலுவான விவசாயிகள் போராட்டத்தை கெட்டிப்படுத்த உதவின. அந்த ஆய்வுகளுக்கு அவர் உட்படுத்திய பல கிராமங்கள் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளன. அவரது தலைமையில் 1957 மற்றும் 1967 களில் அமைந்த  அரசுகள் முந்தைய அவரது ஆய்வு முடிவுகளை அமல்படுத்தின. இன்று விவசாய அரங்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நாம் சிந்திப்பதைவிட ஆழமானது. இது இந்திய விவசாயத்தின் நெருக்கடி மட்டுமல்ல. சர்வதேசிய அளவிலான நெருக்கடியாகும். இதன் தீவிரம் உணவுப்பாதுகாப்பை தகர்த்துள்ளது. 140 கோடி மக்களின் உணவு பாதுகாப்பு தகர்க்கப்படுகிறது. நமக்கு அரிசியும் கோதுமையும் பற்றாக்குறை ஏற்படுகிறது. நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது 20 சதவிகிதம் பற்றாக்குறை என்றால் 30 கோடி மக்களுக்கு உணவு பற்றாக்குறை என்று பொருள். இந்த பற்றாக்குறையை பிலிப்பைன்ஸ், பர்மா போன்ற அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். 2 கோடியும் 5 கோடியும் மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகளில் இந்தியாவுக்கு தேவையான அரிசியை உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு மேலும் அதிகரிக்கும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் உணவு பற்றாக்குறையையும் விலை உயர்வையும் ஏற்படுத்தும் என்றார்.  இந்த கருத்தரங்கில் பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், பகத் சிங்கின் தங்கை மகனும் பேராசிரியருமான ஜக்மோகன் ஆகியோர் பேசினர். பேராசிரியர் ரவீந்திரநாத், அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.