புதுதில்லி, ஏப். 4 - கார்ப்பரேட் ஆதரவு - மதவெறி கள்ளக்கூட்டு மோடி அரசாங்கத்தின் கொடிய கொள்கைகளை எதிர்த்து தில்லியில் பிரம்மாண்டமான தொழி லாளர் - விவசாயி சங்கமப் பேரணி ஏப்ரல் 5 (இன்று) பேரெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைமையில் நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளிலிருந்தும் இதர பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகள் மற்றும் நடுத்தர வர்க்க ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பிலும் இந்த பிரம்மாண்டப் பேரணியில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள். அதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தில்லி யில் குவிந்துள்ளனர். கடந்த 6 மாத காலமாக இதற்காக விரிவான தயாரிப்பு நாடு முழுவதும் நடந்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சனைகளை வலி யுறுத்தியும், விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதிசெய்வது, கடன் தள்ளுபடி, தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெறுதல், கிராமப்புற வேலைஉறுதித் திட்டத்தை விரிவு படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏப்ரல் 5 தொழிலாளி - விவசாயி மகாசங்கமம் நடைபெறுகிறது. தில்லி நாடாளுமன்ற வீதியில் நடைபெற உள்ள இந்த மாபெரும் சங்கமத்தையொட்டி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரியக்கத்தில் மேற்கண்ட சங்கங் களின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.