states

img

கார்ப்பரேட்டுகளின் க(ள)னவு நாயகன் மோடி பராக்…பராக்…பராக்… - கார்த்திக் மதிவாணன்

தொழில் வளர்ச்சியில் முன்னேறி, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற நிலையை அடைந்திருக்கும் கோயம்புத்தூர், தொழில் நகரமாக உருவாக எவ்வளவு நெருக்கடி வந்தாலும் முயற்சியை அவ்வளவு எளிதில் கைவிடாத, தன்னம்பிக்கை மிக்க உழைப்பாளி மக்களை கொண்டிருப்பதுதான் கோவை மாவட்டத்தின் சிறப்பு. அதேநேரத்தில், இயற்கையான நெருக்கடிகளை எதிர்கொண்டு முன்னேறிய தொழிலாளர்களும், தொழில் முனைவோர்களும், கார்ப்பரேட் நலனுக்காக திட்டமிட்டே ஒன்றிய மோடி அரசு குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர் என்பதே நிதர்சனம்.

அச்சுத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி, காலத்துக்கேற்ற மாற்றத்துடன் நாடுமுழுவதும் 17 இடங்களில் இந்திய அரசு அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 132.7ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த அச்சகத்தை மோடி அரசு மூடிவிட்டது.  இங்கு தபால்துறையில் பயன்படுத்தப்படும் கடிதம், கார்டு, கணக்கு புத்தகம், கோவை வேளாண் பல்கலைக்கழக வினாத்தாள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமிற்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறை சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் அச்சடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த அச்சகத்தை மூடிவிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் அச்சகத்துடன் இணைப்பதாக ஒன்றிய மோடி அரசு அறிவித்தது.  இந்த அச்சகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், “பிரஸ்சை மூடப் போறாங்கன்னு சொன்னதுமே அதிர்ச்சியில், ஜெயக்குமார்,  பரமசிவம்-னு மூன்று தொழிலாளிங்க உசிர விட்டுட்டாங்க. பிள்ளைகளோட படிப்பு என்னாகும், அவங்க கல்யாணம் எப்படி நடக்கும், குடும்பம் சிதறுமேன்னு பரிதவிச்சோம். நாங்க இதுவரைக்கும் போராட்டம் நடத்தினதே இல்லீங்க. யூனியனே நிர்வாகத்துகூட பேசி பிரச்சனையை தீர்த்து வச்சுடும். இப்போ இங்கிருக்கிற நூறு ஏக்கர் நிலம் இவங்க (பாஜக)  கண்ணை உறுத்துகிறது. அதனை விற்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பிரஸ்சை மூடிட்டாங்க. மோடியின் சர்வாதிகாரத்துக்கு மக்கள்தான் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கணும்” என்றனர்.

முற்றும் நெருக்கடியும் திணறும் தொழில்துறையும்

விவசாயம், ஜவுளித்துறை அனைத்திலும் முத்திரை பதித்த கோவை மாவட்டம், தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு குறு,சிறு, நடுத்தர தொழிலிலும் தனது முத்திரையை பதித்தது. இன்று இந்தியாவின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகவும், நாட்டிலேயே வளர்ந்து வரும் முதல் 20 பொருளாதார முக்கியத்துவம் மிக்க மண்டலங்களில் ஒன்றாகவும் கோவை உள்ளது.  இங்குள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பொருளாதார வளர்ச்சிக்கும், சுழற்சிக்கும் மிக முக்கியப் பங்கினை ஆற்றுபவை. பஞ்சாலை, இன்ஜினியரிங், மோட்டார் பம்புகள் உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில், விசைத்தறி, வார்படம், தென்னைப் பொருட்கள் என பல தொழிற்கூடங்கள் செயல்படும் மாவட்டமாகும். கோவை மாவட்டத்தின் அடையாளமே தொழில்களும், தொழிலாளர்களும் என்றான நிலையில், ஒன்றிய மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா பெருந்தொற்று, மூலப்பொருட்களின் நிலையில்லா தன்மை, மின் கட்டணம் உள்ளிட்ட அடுத்தடுத்த தாக்குதல்கள், மீண்டு வந்துவிடுவோம் என்ற தொழில் முனைவோரின் நம்பிக்கையை சீர்குலைத்துக்கொண்டிருக்கிறது.

35 சதவீத மில்கள் மூடப்படும் அபாயம்

என்டிசி பஞ்சாலைகள் மட்டுமல்ல; மொத்த ஜவுளித்துறையுமே சீர்குலைந்து கிடக்கிறது.  சமீபத்தில் தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூட, இந்நிலை தொடர்ந்தால், 35 சதவிகிதத்திற்கும் மேலான மில்களை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை என்றனர். ஆனாலும், மோடி அரசை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் மென்மையாக கடந்து செல்கின்றனர். இப்போது இருக்கிற நெருக்கடி இவர்கள் சார்ந்தது மட்டுமல்ல; லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது என்பதும்; தொழிலுக்கு இடையூறு வந்துவிடும் என்பதற்காக அச்சப்படுவது நியாயம்தான், ஆனால், தொழிலே முற்றிலுமாக சீர்குலைந்து கிடக்கிற நிலையில் எத்தனை நாள் வலி தெரியாமல் இவர்கள் நடிப்பார்கள் என்பதே இப்போதைய கேள்வியாக தொக்கி நிற்கிறது.

வெட்கிரைண்டர் உற்பத்தி 50% வீழ்ச்சி :  யார் காரணம்?

கோவையில் 700க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல்,  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு முன்பு வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி அறிமுகமானபோது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழில் முனைவோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி முற்போக்கு இயக்கங்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து,18 சதவீதமாகவும், பின்னர் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.  இதுகுறித்து கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 50 சதவீதம் மட்டுமே கிரைண்டர் உற்பத்தி செய்து வருகிறோம். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியில் தொடங்கிய பிரச்சனை, கொரோனா, குவாரிகள் மூடல், மூலப்பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி உயர்வால் வெட் கிரைண்டர் விலை கணிசமாக உயர்ந்து விற்பனை சரிவை சந்தித்துள்ளது. விற்பனை மந்தமானதால் உற்பத்தியாளர்கள் பலருக்கு சரிவர ஆர்டர்கள் கிடைப்பதில்லை. வெட் கிரைண்டர் தொழிலை நம்பியிருந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்துள்ளனர். சிறு குறு தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்கி வந்த 15 சதவீத மானியத்தையும் ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது.  கார்ப்பரேட் முதலாளிகளுடன் கைகோர்த்துக்கொண்டு சிறு குறு தொழில்களை  நசுக்கும் முயற்சியில் ஒன்றிய மோடி அரசு ஈடுபடுவது வேதனை அளிக்கிறது என்றனர்.