states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மிக கனமழை: டெல்டா மாவட்டத்திற்கு எச்சரிக்கை 

 சென்னை, நவ.3- டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:-  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக வெள்ளியன்று (நவ.4) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சா வூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் கன முதல் மிக கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி,  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சனிக்கிழமையன்று(நவ.5)தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் இடி  மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி பேரணி

சென்னை, நவ. 3 - அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக செயல்படும் ஆளுநர்களை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி, மாநாடு நடத்த உள்ளதாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியது: இந்தியாவை கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. இதனால் பொருளாதாரம் திண்டாடுகிறது. கார்ப்பரேட் மய பொருளாதார கொள்கையால், வேலை வாய்ப்பு உருவாகாது; விலைவாசியும் குறையாது. ஆகவே, இலங்கையை போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அரசியலில் இளைஞர்கள் பங்கேற்க விடாமல் பாஜக திசை திருப்புகிறது. அதானி துறைமுகம் வாயிலாக லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது; மறுபுறம் மதவெறி தூண்டப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ கத்தை படாதபாடுபடுத்துகிறார். அவருக்கு துணையாக ஆளுநர் இருக்கிறார். ஆளுநர்  ஏதாவது ஒன்றை பேசி தினசரி விவாதமாக்கு கிறார். 4 பேர் செய்த தவறுக்காக கோவை பயங்கர வாதிகளின் நகரமாகி விட்டது.

என்ஐஏ-விடம் வழக்கை ஒப்படைக்க காலதாமதமானதால் ஆதாரங்களை அழிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் பேசுகிறார். கோவை கார் சிலிண்டர்  வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்ஐஏ கண்காணிப்பில் இருந்தவர்கள். ஒன்றிய அரசு  அவர்களை உளவு பார்ப்பதில் கோட்டைவிட்டு விட்டது. அதனை மறைக்க தமிழக அரசை குறை கூறுகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது. இதற்கெதிராக அனைவரும் ஒன்று சேரும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ளதுபோல், பல மாநிலங்களில் வலுவான அணி அமையும். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற  தேர்தலில் தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றதுபோல், பல மாநிலங்களில் நிகழும்.  அதற்காக மதச்சார்பற்ற சக்திகளை ஒருங் கிணைக்கும் மகத்தான பணி நடைபெறுகிறது. அரசியலமைப்பு சட்டத்தையும், மாண்பு களையும் மீறி செயல்படும் கேரளாவில் ஆளுநரை  கண்டித்து நவ.15ஆம் தேதி அன்று இடதுசாரிகள் மகத்தான பேரணி நடத்த உள்ளனர். அதில், திமுக  தலைவர்களில் ஒருவரை பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளோம். பாஜக ஆட்சியில்லாத மாநில முதலமைச்சர்கள், அந்த மாநிலங்களில் உள்ள  கட்சித் தலைவர்களின் அகில இந்திய மாநாட்டை சென்னை அல்லது வேறு இடத்தில் நடத்த  கட்சியின் மத்தியக்குழு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேல் தேர்தலில் நேதன்யாகு முன்னிலை

ஜெருசலேம், நவ. 3- இஸ்ரேல் தேர்தலில் முன்னாள் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான தீவிர வலதுசாரிகள் வெற்றி பெற்றனர். புதன்கிழமையன்று 86 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நேதன் யாகுவின் கூட்டணி 65 இடங்களைக் கைப்பற்றியது. நேதன்யாகுவின் லிகுட்  கட்சி 32 இடங்களைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. தீவிர தேசியவாத மதவாத சியோ னிஸ்ட் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க உள்ளார் நேதன்யாகு (73). லிகுட் கட்சியின் தலைமையகத்தில் அவர் பேசுகையில், தான் ஒரு பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், நாட்டின் நம்பிக்கையை மீண்டும் பெற்றிருப்ப தாகவும் தெரிவித்தார். பல ஊழல் வழக்குகளில் விசாரணையில் உள்ள நேதன்யாகுவை பதவி நீக்கம் செய்து 2021 ஆம் ஆண்டு நெஃப்தாலி பென்னட் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. ஆனால், பெரும்பான்மையை இழந்ததால், அந்த அரசு கலைக்கப்பட்டது.  யேஸ் ஆற்றிட் என்கிற மத்திய-இடதுசாரி கட்சியின் தலைவரான எயர் லேபிட், தற்காலிகப் பிரதமரானார். நேதன்யாகு, மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்களைக் கட்டமைக்க வலுவாக ஆதரவளிக்கும்- சுதந்திர பாலஸ்தீனத்தை எதிர்க்கும் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்

நைஜீரியாவில் ஆட்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் கடத்திவிட்டு பணம் கேட்பது அதிகரித்து வருகிறது. துப்பாக்கிகளை ஏந்திய சிலர் வட பகுதியில் உள்ள கட்சினா மாநிலத்தில் சில குழந்தைகளைக் கடத்தியிருக்கிறார்கள். எவ்வளவு குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்ற விபரங்களைக் காவல்துறையினர் வெளியிடவில்லை. ஆனால், கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தரப்பில் 30 குழந்தைகள் கடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகம் குறைந்துள்ளதாலும், வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளதாலும் வரும் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் என்று அந்நாட்டின் புதிய நிதியமைச்சர் எலிசபெத் ஸ்வான்டெசன் எச்சரித்துள்ளார். சக குடிமக்களில் பலரும் கடுமையான சூழலை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று கூறியுள்ள அவர், தற்போதுள்ள நிலைமை மோசமாகாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம் என்றார்.

ஆன்டிகுவா மற்றும் பர்புடா தனது விடுதலை நாளைக் கொண்டாடியுள்ளது. மக்களிடம் உரையாற்றிய பிரதமர் காஸ்டன் பிரவுன், கடந்த 41 ஆண்டுகளில் செய்த சாதனைகளைக் குறிப்பிட்டு, நாட்டின் விடுதலைக்கான காரணங்களை இந்த சாதனைகள் நியாயப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார் . தரமான வேலைகள், உயர்ந்த ஊதியம், சாலை வசதிகள், வசதியான வாழ்க்கை உள்ளிட்ட சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், பர்புடாவில் வேலையின்மையைக் கிட்டத்தட்ட ஒழித்துள்ளோம் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார்.