திருச்சிராப்பள்ளி, செப்.5 - 8 மணிநேர வேலை, தண்டனை வழங்கும் முன் முறையான விசாரணை, ஊதிய விகிதமாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக 1946 இல் ரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை ஒடுக்க, ஆங்கிலேய அரசின் ஹாரிசன் தலைமையிலான மலபார் போலீசார் சுட்டதில், தோழர்கள் தங்கவேலு, தியாகராஜன், ராஜூ, ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 இளம்தோழர்களின் நெஞ்சில் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத்திடலில் உயிர் நீத்தனர். பொன்மலைத் தியாகிகள் நினைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன், பெல், சிஐடியு, அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று பொன்மலை தியாகிகள் 77ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் செயலாளர் ஆர்.ராஜா தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு-மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், வாலிபர் சங்கத்தினரும், கட்சியின் புறநகர் மாவட்டக்குழு சார்பில் செயலாளர் எம்.ஜெயசீலன் தலைமையில் மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாவட்டசெயற்குழு - மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஒர்க் சாப் டிவிசன் தலைவர் லெனின் தலைமையில் உதவி பொதுச் செயலாளர் சந்தானசெல்வம், திருச்சி டிவிசன் ராஜா, சரவணன் மற்றும் டிஆர்இயு சங்கத்தினர், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமையில் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். முன்னதாக பொன்மலை தியாகிகள் தினத்தையொட்டி, சிஐடியுவினர் பாலக்கரை ரவுண்டானாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு பொன்மலை சங்கத்திடலை வந்தடைந்தனர்.