திருச்சி, நவ. 5 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழி உரிமை பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை அன்று திருச்சி கலைஞர் அறிவா லயத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாநாட்டின் துவக்கமாக மொழிப்போர் ஈகியர் சின்னச்சாமி நினைவிடத்தில் இருந்து மொழியுரிமை சுடரை திருச்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜன் எடுத்துக் கொடுக்க, சுடரை மாநில பொருளாளர் சைதை ஜெ பெற்றுக் கொண்டார். அங்கிருந்து சுடர் ஊர்வலமாக மாநாடு நடைபெறும் கலைஞர் அறிவாலயத் திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு மாநாட்டு மொழி யுரிமை சுடரை இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர் ஈகியர் திருச்சி கீழப்பழுவூர் சின்னசாமியின் இணையர் கமலம் அம்மையார், மகள் திராவிட செல்வி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மொழிப்போர் ஈகியர் நடராஜன் - தாளமுத்து நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டு இருந்த மொழியுரிமை போராட்ட வரலாற்று கண்காட்சியை திருச்சி மாநகர மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார்.
இதையடுத்து மொழிப்போர் ஈகியர் சின்னசாமி நினைவு மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழியுரிமை பாதுகாப்பு மாநாட்டிற்கு த.மு.எ க.ச. மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நீலா வரவேற்றார். முதல் அமர்வுக்கு மாநில துணைத்தலைவர் நந்தலாலா தலைமை வகித்தார். இதில் மொழியுரிமைப் போராட்ட வரலாறு என்ற தலைப்பில் வரலாற்றாளர் செந்தலை கௌதமன், திராவிடர் கழகம் பரப்புரைச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் பேசினர். இரண்டாவது அமர்வுக்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில் மொழி - தேசிய மொழிகள் -அலுவல் மொழி என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் அருணன், சமூக செயற்பாட்டாளர் மருதையன் ஆகியோர் பேசினர். மூன்றாவது அமர்வுக்கு துணைப் பொதுச்செயலாளர் உமா தலைமை வகித்தார். இதில் ஒன்றிய அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்ற தலைப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் பேசினர். செயல் திட்டத்தை முன்மொழிந்து பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினார். இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் பேசினர். முடிவில் திருச்சி மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் நன்றி கூறினார். மாநாட்டில் மொழியுரிமை பாடல்களை கரிசல்குயில் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, வசந்தி, உடுமலை துரையரசன் ஆகியோர் பாடினர்.